Skip to main content

மாவட்டத்தை பிரிக்கிறார்களோ,இல்லையோ... அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண் டாகப் பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பொது மக்களும் வர்த்தகர்களும் போராடி ஓய்ந்து விட்டனர். ஆனால் நாகை மாவட்ட அ.தி. மு.க.விலோ, "கட்சி ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரித்தே ஆகவேண்டும்' என்ற சலசலப்பு ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் அமைச்சர் ஓ.எஸ். மணியன்தான்.

அந்த மாவட்டத்தின் அ.தி.மு.க. சீனியர் ஒருவர் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.  சசிகலா குடும்பத்தின் விசுவாசியாக இருந்த ஓ.எஸ்.மணியன்தான் இந்த மாவட்டத்தின் மா.செ.வாக இருந்தார். ஒரு கட்டத்தில் இவரின் நடவடிக்கைகளால் கடுப்பான ஜெயலலிதா, மா.செ.பதவியிலிருந்து மணியனை நீக்கிவிட்டு, அமைச்சர் ஜெயபாலை மா.செ.வாக்கினார். கட்சிக்காரர்களும் பொதுமக்களும் அமைச்சர் ஜெயபாலை எளிதாக சந்திக்கலாம். அவரும் கட்சிக்காரர்களுடன் மிக எளிமையாக பழகி, அரவணைத்துச் செல்வார். அப்போதே மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ஜெயபால்.

 

admk



சசிகலா குடும்பத்தின் கிருபையால், திடீரென ஜெயபாலுக்கு கல்தா கொடுத்து விட்டு, மீண்டும் ஓ.எஸ்.மணியனை மா.செ.வாக்கினார் ஜெயலலிதா. அன்றிலிருந்து இன்று வரை மணியனின் ராஜ்யம்தான். இப்போதுகூட மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, ஊரின் முக்கியப் பிரமுகர்கள் சந்திக்கச் சென்றபோது, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார் மணியன். இவரின் தர்பாரை பொறுக்க முடியாமல்தான் பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ராஜ், முதல்வர் எடப்பாடியை சமீபத்தில் சந்தித்தார்.


அப்போது, நான் இரண்டு முறை எம்.எல்.ஏ.வா இருந்திருக்கேன். ஆனா அவரோ இப்பதான் எம்.எல்.ஏ.வானாரு. அவருக்கு அமைச்சர் பதவியும் மா.செ.பதவியும் கொடுத்திருக்கீங்க. அதனால என்னை அமைச்சராக்குங்க, இல்லேன்னா மா.செ.பதவி கொடுங்க. அப்படி கொடுக்கலேன்னா, மாவட்டத்தைப் பிரிக்கப் போராடும் மக்களுடன் நானும், எனது ஆட்களும் களத்தில் இறங்குவோம்''’என ஓப்பனாகவே பேசிவிட்டுத் திரும்பியிருக்கிறார்''’என்றார். "இதெல்லாம் உண்மையா?' என எம்.எல்.ஏ. பவுன்ராஜின் ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். உண்மைதாங்க. இந்த மாவட்டத்திலேயே அதிக வருமானம் தரக்கூடிய கோட்டம் மயிலாடுதுறைதான். அதை முழுமையா அறுவடை செய்பவர் மணியன்தான். கொள்ளிடம் பெட் டேமுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக்கூட, அவரது இறால் குட்டையை வளப்படுத்த வேதாரண்யம் கள்ளி மேட்டுக்கு கொண்டு போய்ட்டார். அதேபோல் கொள்ளிடம் ஆற்று மணல் சம்பாத்தியம் மொத்தத்தையும் மணியனே சுருட்றாரு.

தேர்தலப்ப மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுப்பேன்னு பவுன்ராஜ் கொடுத்த வாக்குறுதிய மக்கள் இப்ப அவர்ட்ட கேக்குறாங்க. இதைத்தான் கட்சியின் செயற்குழுவில் இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கேட்டார் பவுன்ராஜ். இதனால் கடுப்பான மணியன், கூட்டத்திலிருந்து பாதியிலேயே கிளம்பிவிட்டார். அரசாங்க ரீதியாக மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கிறார்களோ, இல்லையோ... கட்சி ரீதியாக இரண்டாகப் பிரித்தால் சரிப்பட்டு வரும், அதற்கான வேலைகளும் நடக்கிறது''’என்றார். கட்சிக்குள் மாவட்ட பிரிப்பு புகைச்சல் இருப்பது உண்மையா என தெரிந்துகொள்ள அமைச்சர் ஓ.எஸ்.மணியனை பலமுறை தொடர்புகொண்டும் பலனில்லை. அமைச்சருக்கு உதவியாக இருக்கும் ஒருவர் நம்மைத் தொடர்புகொண்டு, “எம்.எல்.ஏ. பவுன்ராஜ், மா.செ. பதவியோ, அமைச்சர் பதவியோ கேட்டாரான்னு தெரியாது. ஆனா அன்னைக்கு கூட்டத்திலிருந்து அமைச்சர் பாதியிலேயே வந்ததுக்கு காரணம், அவரின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால்தான்''’என்றார்.

இரண்டு தரப்புக்கும் பொதுவான ர.ர. ஒருவர், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க., பா.ஜ.க. கட்சிகளில் நாகை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்கள் இருப்பது போல் எங்க கட்சியிலும் இருந்தா என்ன தப்பு?''’என்கிறார்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.