Skip to main content

ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரசு கேபிள்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

டெல்லியில் உள்ள தொலைத்தொடர்பு தொடர்பான சிக்கல்களை விசாரிக்கும் ஆணையம் தமிழக அரசு நடத்தும் அரசு கேபிள் மீது அபராதம் விதித்திருக்கிறது. இந்த நடவடிக்கை அரசு கேபிள் கம்பெனியை மூடுவதற்கான முன்னோடி என்கிறார்கள் அந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்.

மதுரை மாநகராட்சி ஊழல் தொடர்பாக உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தது. இதுபற்றி சத்யம் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 11-ஆம் தேதி விவாத நிகழ்ச்சியில் பேசினார் என்பதற்காக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மீது கிரிமினல் வழக்கு ஒன்றை சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் பரிந்துரையின் பேரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்தார். அத்துடன் அந்த விவாத நிகழ்ச்சியை நடத்திய சத்யம் டி.வி.யை அரசு கேபிளில் தெரியாதவாறு துண்டித்தார்.

 

admk



இதை எதிர்த்து சத்யம் டி.வி.யின் பார்வையாளர்கள் மூன்றுபேர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கு தொடரப்பட்டவுடன் அதை மறைக்க நினைத்த தமிழக அரசு, அரசு கேபிளில் கட்டணம் குறைக்கப்படும் என அறிவித்தது. அத்துடன் சத்யம் டி.வி.யில் அந்த விவாதத்தை நடத்திய அதன் பொறுப்பாசிரியர் அரவிந்தாக்ஷனை வெளியேற்ற வேண்டும் என்கிற கண்டிஷனோடு மறுபடியும் சத்யம் டி.வி.யை அரசு கேபிளில் தெரியவைத்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த ஆணையம், தன்னிச்சையாக ஒரு டி.வி.யின் ஒளிபரப்பை முடக் கியதால் அரசு கேபிளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்துள்ளது என்கிறது தொலைக்காட்சித்துறை வட்டாரம்.

 

cable tv



இதுபற்றி சத்யம் டி.வி. பொறுப்பாசிரியர் அரவிந்தாக் ஷனை கேட்டோம். "அரசு கேபிளில் சத்யம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. அதை மறுபடியும் கொடுத்துவிட்டார்கள்'' என்று நிலவரத்தைச் சொன்னார். சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் "டைம்ஸ் ஆஃப் இண்டியா' சங்கர், ""தனியார் கையில் கேபிள் டி.வி. இருந்த போது அவர்கள் துண்டிப்பு வேலைகளைச் செய் தார்கள் என்பதற்காகத்தான் அரசு கேபிள் டி.வி. உதயமானது. அரசு கேபிள் டி.வி. சத்யம் டி.வி. மீது இதுபோன்ற துண்டிப்பு நடவடிக்கையை மேற் கொண்டதால் சத்யம் டி.வி.யின் பார்வையாளர்கள் ஆணையத்தில் வழக்குப் போட்டு அரசு கேபிள் டி.வி.க்கு அபராதம் விதிக்க வைத்திருக்கிறார்கள். இனிமேலாவது அரசு அதன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.


"இதுபோன்ற துண்டிப்பு நடவடிக்கைகளை யார் செய்வது?' என தமிழக அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனில் பணிபுரிபவர்களிடம் கேட்டோம். ""இந்தியாவில் தமிழக அரசைத் தவிர வேறெந்த மாநில அரசும் கேபிள் டி.வி.யை நடத்தவில்லை. இந்திய அரசின் தொலைத்தொடர்பு கொள்கையை நடைமுறைப்படுத்தும் டெலிபோன் ரெகுலேட்டர் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் சட்டதிட்டங்களிலே "எந்த மாநில அரசும் கேபிள் டி.வி. நடத் தக்கூடாது' என தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழக அரசு கேபிள் டி.வி. நடத்துவதற்காக தொலைத்தொடர்பு ரெகுலேட்டர் அத்தாரிட்டி (டிராய்), ஒரு தற்காலிக லைசென்ஸ்தான் தந்திருக்கிறது. அரசு கேபிள் மீது புகார்கள் வருமானால் அந்த தற்காலிக லைசென்ஸ் ரத்து செய்யப்படும். இதன் மேனேஜிங் டைரக்டரான சங்கர் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப் பட்டிருக்கிறார். அவருக்கு கீழே 11 டைரக்டர்கள் இயங்குகிறார்கள். அதில் இரண்டுபேர் உள் ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் கீழ் இயங்கும் அதிகாரிகள். ஒருவர் ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மைச் செயலாளர், இன்னொருவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் முதன்மைச் செயலாளர். இவர்களைத் தவிர தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரி, எல்காட் நிறுவன எம்.டி., நிதித்துறை கூடுதல் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் அமைச்சர் வேலுமணி சொல்வதைச் செய்கிறார்கள். வேலுமணிதான் தந்தி டி.வி., புதிய தலைமுறை, சன் டி.வி., காவேரி டி.வி. ஆகியவற்றை அரசு கேபிளில் முன் வரிசையிலிருந்து பின்வரிசைக்கு கொண்டு சென்றவர். அவர்தான் சத்யம் டி.வி.யை அரசு கேபிள் இணைப்பிலிருந்தே நீக்கியவர். சத்யம் டி.வி. நிர்வாகிகள் அமைச்சரிடம் பேசியபோது, "பொறுப்பாசிரியர் அரவிந்தாக்ஷனை நீக்குங்கள்' என கட்டளையே போட்டார் என்கிறது கேபிள் டி.வி. வட்டாரம்.


இப்படி எந்த டி.வி.யில் யார் வேலை செய்யவேண்டும் என அரசு உட்பட வெளியிலிருப்பவர்கள் தீர்மானிப்பது தவறு. காவேரி டி.வி.யில் வேலை பார்த்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியான கருத்து ஒன்றிற்காக வேலையை விட்டு விலகியுள்ளார். ஊடகம் என்பது சுதந்திரமானது, அதனால்தான் வெளிநாட்டு முதலீட்டில் ஊடகங்கள் வந்தாலும் அதன் ஆசிரியர் குழு இந்தியர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற நடைமுறை இந்தியாவில் இருக்கிறது. அதன் அடிப்படையே தெரியாமல் எடப்பாடி அரசு நடந்துகொள்கிறது' என கொந்தளிக்கிறார்கள் சென்னை பத்திரிகையாளர்கள்.
 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.