Skip to main content

சிவகார்த்திகேயனின் ஆபரேஷன் சக்ஸஸ் ஆனதா..? ‘டாக்டர்’ விமர்சனம் !

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

sivakarthikeyan starring doctor review

 

'கோலமாவு கோகிலா' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'பீஸ்ட்' இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘டாக்டர்’. தனது படங்களில் எப்போதும் கலகலவென்று பேசி நடிக்கும் சிவகார்த்திகேயன் முதல் முறையாகப் பேசாமல் அமைதியாக நடித்திருக்கும் படம். இதுதவிர, சிவகார்த்திகேயனின் வலுவான கம்பேக் படமாக இது இருக்குமா..? எனப் பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான 'டாக்டர்' படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா...? 

 

ராணுவத்தில் டாக்டராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும், பிரியங்கா மோகனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. பிரியங்கா மோகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால் சிவகார்த்திகேயனை மணக்க மறுக்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனுக்கோ பிரியங்காவை விட மனசு இல்லை. இதற்கிடையே பிரியங்காவின் அண்ணன் மகள் திடீரென காணாமல் போகிறார். அவரை யாரோ கடத்திவிட, கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க மிலிட்டரி டாக்டர் சிவகார்த்திகேயன் பிரியங்கா குடும்பத்தின் உதவியோடு  களத்தில் குதிக்கிறார். பிறகு சிவகார்த்திகேயன் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்தாரா, இல்லையா? சிவாவின் திருமணம் நடந்ததா, இல்லையா? என்பதே டாக்டர் படத்தின் கதை.

 

கோலமாவு கோகிலா படம் போல் இந்த படத்தையும் ஒரு டார்க் ஹியூமர் திரில்லர் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன். கோலமாவு கோகிலா படம் பிடித்தவர்களுக்கு இந்த படமும் கண்டிப்பாகப் பிடிக்கும். முந்தைய படத்தில் போதைப் பொருள் கடத்தலை மையப்படுத்திய இயக்குநர், இந்த படத்தில் ஆள் கடத்தலை மையப்படுத்தி ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார். கோ.கோ படத்தில் ஒரு அப்பாவியான குடும்பம் செய்யும் க்ரைம் வேலைகளை மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த காமெடி காட்சிகளோடு உருவாக்கியிருப்பார் இயக்குநர் நெல்சன். அதே பாணியை அப்படியே இந்த படத்திலேயும் பின்பற்றியுள்ளார். கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சியமைப்புகளாக இருந்தாலும் அவை இப்படத்திலும் ரசிக்கும்படி அமைந்து அயர்ச்சியைத் தவிர்த்துள்ளது. இருப்பினும், முதல் பாதி வேகமாகவும், இரண்டாம் பாதி சற்று தொய்வுடன் நகர்ந்துள்ளது. வில்லன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஆங்காங்கே அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அவற்றின் நீளத்தைச் சற்று குறைத்திருந்தால் இன்னும் கூட படத்தை ரசித்திருக்கலாம்.

 

யோகிபாபு, கிங்ஸ்லி, சிவா அரவிந்த், சுனில் ரெட்டி, தீபா சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்பாக அமைந்து படத்தின் வேகத்தைக் கூட்டியுள்ளது. கோ.கோ படத்தில் கிங்ஸ்லி செய்த கதாபாத்திரத்தை அப்படியே இப்படத்தில் பிரதிபலித்துள்ளார் நடிகர் சிவா அரவிந்த். அதுவும் ரசிக்கும்படி அமைந்து கதையை நகர்த்தியுள்ளது. அதேபோல் யோகிபாபு மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் தங்களது பங்குக்கு ஆங்காங்கே கிடைத்த இடங்களில் எல்லாம் காமெடியில் ஸ்கோர் செய்து கலக்கியுள்ளனர்.   

 

sivakarthikeyan starring doctor review

 

பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அளவாகப் பேசி அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முகத்தில் அதிகமாகப் பாவனைகளைக் காட்டாமலேயே நடித்துள்ளார். இது கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும் அவரது ரசிகர்களுக்கு ஏற்றுக்கொள்ளும்படி இருந்ததா என்றால்? சந்தேகமே! நாயகி பிரியங்கா மோகன் ஆரம்பத்தில் கலகலப்பாகப் பேசி, பின்னர் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சராசரி கியூட் கதாநாயகி வேலையைச் சரியாகச் செய்துள்ளார். வில்லனாக வரும் நடிகர் வினய் பயமுறுத்த முயற்சி செய்துள்ளார். கதைக்குள் இருக்கும் வில்லத்தனம் இவரது கதாபாத்திரத்துக்குள் இருக்க மறுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இவரது கதாபாத்திரத்தை சில இடங்களில் டம்மி செய்துள்ளனர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

 

இளவரசு, அர்ச்சனா, மிளிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர் ஆகியோர் அவரவர் வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர். படத்துக்கு இன்னொரு ஹீரோவாக அனிருத்தின் பின்னணி இசை அமைந்துள்ளது. குறிப்பாகக் கோவா சம்பந்தப்பட்ட காட்சிகளில் வரும் பின்னணி இசை அட்டகாசம். அதேபோல் செல்லம்மா பாடல் ஆட்டம் போட வைக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதிலும் குறிப்பாக மெட்ரோ ரயில் சண்டைக்காட்சியைச் சிறப்பாகக் கையாண்டு ரசிக்கவைத்துள்ளார்.

 

கோலமாவு கோகிலா படத்தின் சாயல்கள் இந்த படத்தில் அதிகமாக இருந்தாலும் அவை ரசிக்கும்படி அமைந்து படத்தைக் கரை சேர்த்துள்ளது. 

 

டாக்டர் - ஆபரேஷன் சக்ஸஸ்! 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காற்று அசைவதால் நமது கொடி பறக்காது” - நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயேன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
sivakarthikeyan about Major Mukund Varadarajan on his 10th passed away anniversary

கடந்த 2014 ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அமரன் என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க, ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதில் இஸ்லாமியர்களைத் தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது. 

இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் மறைந்து இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்த நாளில் இன்று காலையில் டெல்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜன், நினைவு பலகைக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மலர் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவரை நினைவுகூறும் விதமாக அவர் வாழ்க்கை கதை அடங்கிய சிறு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

மேலும் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்காது, அதைக் காத்து வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் இறுதி மூச்சிலும் பறக்கிறது” எனக் குறிப்பிட்டு அவர் மரியாதை செலுத்தும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.