அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோப்ரா'. 7 வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ள இப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், பட ப்ரோமோஷனுக்காக கோப்ரா படக்குழுவினர் கோவை ஜி.ஆர்.டி. கல்லூரிக்கு வருகை தந்தனர்.
அந்த நிகழ்வில் பேசிய நடிகர் விக்ரம், “திருச்சி, மதுரைக்குச் சென்றோம். அங்கு ரசிகர்களின் வரவேற்பு எதிர்பாராத வகையில் இருந்தது. அதைத் தாண்டிய வரவேற்பை உங்களால் கொடுக்க முடியுமா, முடியும் என்பதை உங்களுடைய கைதட்டல் நிரூபித்தது. அதற்கு ரொம்பவும் நன்றி. ரசிகர்கள் அனைவர் மீதும் எனக்கு எப்போதும் மாறாத அன்பு உண்டு.
‘கோப்ரா’ படத்தை ஒட்டுமொத்த குழுவினரும் அனுபவித்து உழைத்தோம். இந்தத் திரைப்படத்தில் மீனாட்சி, மிருணாளினி, ஸ்ரீநிதி ஆகிய மூவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். கல்லூரி பெண் வேடத்தில் மீனாட்சி நடித்திருக்கிறார். அவர் துறுதுறுவென்று இருப்பார். அனைத்து புதிர்களுக்கும் விடை காணக்கூடிய தூண்டுகோலாக அவர் கதாபாத்திரம் இருக்கும்.
நடிகை மிருணாளினியும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலியாக உணர்வுபூர்வமான வேடத்தில் தன் மொத்த உழைப்பையும் வழங்கி இருக்கிறார். நடிகை ஸ்ரீநிதி, ‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அவர் கடும் உழைப்பாளி.
படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தினை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிடவேண்டும் என்பதற்காக இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவரால் இங்கு வர இயலவில்லை. அவருடைய இயக்கத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது. அதேபோல் ‘கோப்ரா’ படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது.
இந்தப் படத்தில் நான் ஏழு கெட்டப்-களில் நடித்திருக்கிறேன். இதுவும் இந்தப் படத்தின் திரைக்கதையில் முக்கியமான அம்சம். சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் சினிமா என எல்லாம் கலந்த ஜானரில் கோப்ரா இருக்கும். படம் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று பாருங்கள்'' எனத் தெரிவித்தார்.