
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக புதுச்சேரியை சேர்ந்த சிலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் மோசடி செய்யப்பட்ட நிறுவனம் கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல் பட்டு வந்தது தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த அந்நிறுவனத்தின் தொடக்க விழாவில் தமன்னா கலந்து கொண்டதும் பின்பு சென்னைக்கு அருகில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இந்நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் காஜல் அகர்வால் கலந்து கொண்டதும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் சார்பில் அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இத்தகவலை தமன்னா தற்போது மறுத்துள்ளார். ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அவர் கொடுத்த அறிவிப்பில், “கிரிப்டோ கரன்சி மோசடியில் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஒரு வதந்தி பரப்பப்படுவது என் கவனத்திற்கு வந்தது. இது போன்ற போலியான மற்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என என் ஊடக நண்பர்களை கேட்டுக் கொள்கிறேன். இது தொடர்பாக எனது குழு நடவடிக்கை எடுக்க பரிசீலித்து வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.