Skip to main content

மீண்டும் படத்தை தொடங்கிய ராஜமௌலி!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020
rrr

 

 

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்ற 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

 

தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா அச்சுறுத்தல் இன்னும் முடிவுபெறாத நிலையில் இந்தத் தேதியிலும் பட வெளியீட்டுக்குச் சாத்தியமில்லை என்பதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. 

 

கரோனா ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்குத் திரும்பியவுடன் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் சினிமா பட ஷூட்டிங்கை அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன. அதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. மார்ச் மாதம் விடாது உழைத்து கொண்டிருந்தோம், திடீரென கரோனாவால் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளோம். இந்தமுறை இரட்டிப்பாக உழைக்க இருக்கிறோம் என்று இயக்குனர் ராஜமௌலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

 

மேலும், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் கொமரம் பீம் கதாபாத்திரத்தின் வீடியோ வருகின்ற அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்