தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில், கடைசியாக வெளியான படம் காலா. 2018-ம் ஆண்டிற்குப் பிறகு எந்தப் படத்தினையும் இயக்காத ரஞ்சித், தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அவரது நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு, நடிகர் ஆர்யாவை வைத்து ரஞ்சித் படம் இயக்கும் முயற்சியில் உள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
பின்னர் இத்தகவலை இயக்குனர் ரஞ்சித் உறுதி செய்தார். வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி இப்படமானது உருவாகி வந்தது. சார்பட்டா எனப் பெயரிப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் வைரலாகியது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் இறுதி நாளை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது. இதனைத் தொடர்ந்து, படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.