'துருவங்கள் 16' படத்தைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் 'நரகாசூரன்'. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன், பத்ரி கஸ்தூரி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்தும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் செய்யப்படாமலேயே இருந்தது. பின்பு, இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கௌதம் மேனன் படத்தில் இருந்து விலகினார்.
இந்த பிரச்சனைகளுக்கு நடுவே, பிற படங்களை இயக்கும் பணிகளில் இயக்குநர் கார்த்திக் நரேன் கவனம் செலுத்தத் தொடங்கினர். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான மாஃபியா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் 'டி 43' படத்தை இயக்கிவருகிறார். இந்த நிலையில், நரகாசூரன் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முயற்சியில் இறங்கிய படக்குழு, இது தொடர்பாக பல்வேறு ஓடிடி நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், சோனி லைவ் நிறுவனத்திடம் நடைபெற்ற பேச்சுவார்தையில் இறுதிமுடிவு எட்டப்பட்டது. இதையடுத்து, சோனி லைவ் தளத்தில் விரைவில் நரகாசூரன் திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், நரகாசூரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நரகாசூரன் திரைப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சோனி லைவ் தரப்பிலிருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.