![mohan haraa movie audio launch held in his birthda](http://image.nakkheeran.in/cdn/farfuture/zlFRTozE_HHPZQYnsh4TUV4rFXu8pw4UUXbrbN9AgNA/1715754131/sites/default/files/inline-images/425_9.jpg)
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் 'மோகன்'. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார். 1999-ஆம் வெளியான 'அன்புள்ள காதலுக்கு' படத்தை இயக்கினார். கடைசியாக தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான 'சுட்ட பழம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக 'ஹரா' படத்தில் நடித்துள்ளார். குஷ்பூ, யோகி பாபு, சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். கோவை எஸ்பி மோகன்ராஜ் தயாரித்துள்ள இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தவிர்த்து விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோகனின் பிறந்த நாளன்று, 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் ஏழை பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான பை, நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். மேலும் ஏழைப் பெண்களுக்குத் தையல் மெஷின் முதலான உதவிப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் மோகன் பேசியதாவது, “எத்தனை தடவை ரசிகர்களுக்கு நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. உங்களுக்கு நான் காலமெல்லாம் கடன் பட்டிருக்கிறேன். நான் நடித்தாலும், இல்லையென்றாலும் என் மீது அன்பு செலுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி. ஏன் நடிக்கவில்லை எனப் பலரும் கேட்கிறார்கள். என்னைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், எனக்குக் கதை பிடித்தால் மட்டுமே நான் நடிப்பேன். இப்படத்தின் இயக்குநர் 7 முறை கதையைத் திருத்திய பிறகு தான் இந்தப்படம் ஒத்துக்கொண்டேன். இந்தப்படத்திற்குக் கோவை மக்கள் கொடுத்த ஒத்துழைப்பு வியப்புக்குரியது, அத்தனை மக்களுக்கும் எங்கள் நன்றி. இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவரும் பிரமாதமாகச் செய்துள்ளார்கள். இன்றைய 2கே கிட்ஸ் முதல் அனைவருக்கும் பிடிக்கும் படி , விஜய் ஶ்ரீ படத்தை உருவாக்கியுள்ளார். இன்றைய நாயகன் இசையமைப்பாளர் ரஷாந்த் அர்வின். அருமையான பாடல்களை அவர் தந்துள்ளார். மகளைப் பற்றிய பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நேர்மையாக உண்மையாக ஒரு படத்தை உருவாக்கினால், எந்த காலத்திலும் வியாபாரம் இருக்கும் என்பதை இப்படம் நிரூபித்துள்ளது” என்றார்.