![malayalam actress files new petition against dileep](http://image.nakkheeran.in/cdn/farfuture/F3Sgoc1gvhkA7KNAv7P72ejTTd8r7Zup4YMagQJ0VfI/1653397858/sites/default/files/inline-images/670_10.jpg)
கடந்த 2017 ஆம் ஆண்டு கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வந்த திலீப் வழக்கின் சாட்சியங்களை அழிக்க முற்பட்டதாகவும், விசாரணை அதிகாரியை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் விசாரணையில் வரும் 31 ஆம் தேதிக்குள் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் நாளுக்கு நாள் புதிய புதிய திருப்பங்களையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகர் திலீப்புக்கு அரசியல் செல்வாக்கு உள்ளது. ஆளும் கட்சி பிரமுகர்கள் சிலருடன் தொடர்பில் உள்ளார். இதனால் இந்த வழக்கில் பின்னடைவு ஏற்பட கூடும் என்பதோடு சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால் இவ்வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் தலையிட்டு எனக்கு நீதியை பெற்று தர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இது தற்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.