பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 1'. இந்திய அளவில் இப்படத்திற்கு கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இதன் அடுத்த பாகம் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி வருகிறது.
கரோனா நெருக்கடி காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படக்குழு மீண்டும் பணிகளைத் தொடங்கியது. தற்போது, இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' தொடர்பாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "'கே.ஜி.எஃப் சேப்டர் 2' படம் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது என்று நாங்கள் கூற வேண்டிய நாள் வந்துவிட்டது. டிசம்பர் 21-ம் தேதி எங்களது ரசிகர்களுக்காக ஒரு சம்பிரதாயத்தை கடைபிடிப்பது வழக்கம். இந்த வருடமும் அது இருக்கும். வரும் டிசம்பர் 21-ம் தேதி காலை 10.08 மணிக்கு படக்குழுவிடம் இருந்து உங்களுக்கு விருந்து உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து உற்சாகமான ரசிகர்கள், இது டீசருக்கான அப்டேட்டாக இருக்குமோ அல்லது டிரைலருக்கான அப்டேட்டாக இருக்குமோ என சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.