Skip to main content

'அந்த இரு பெண்கள்தான் அனைத்திற்கும் காரணம்' - மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து பகிரும் கலைஞானம்!

Published on 09/12/2021 | Edited on 09/12/2021

 

Kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மகாபாரதத்தின் தொடக்கம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

மகாபாரதத்தில் ஒரு காதல் கதை வரும். மகாபாரதம் ஆரம்பிப்பதற்கு இருவர்தான் ஆணி வேர். ஒருவர் சர்மிஷ்ட்டை. மற்றொருவர் தேவயானி. ஒரு அசுரனின் மகள்தான் சர்மிஷ்ட்டை. தேவயானி சுக்ராச்சார்யாரின் மகள். சுக்ராச்சார்யார் பெரிய மகரிஷி. அவரைப் பார்த்தால் தேவலோகம் பயப்படும். அங்குள்ள அசுரர்களுக்கு அவர்தான் குரு. சர்மிஷ்ட்டையும் தேவயானியும் நண்பர்கள். சுக்ராச்சார்யாருக்கு உயிரோடு இருப்பவர்களை சாகடிக்கவும் தெரியும். இறந்தவர்களை உயிரோடு எழுப்பவும் தெரியும். சர்மிஷ்ட்டை, தேவயானி மற்றும் அவர்களுடைய நண்பர்கள் அனைவரும் உடுத்தியிருந்த துணிகளை அவிழ்த்து வைத்துவிட்டு வேறு துணியை கட்டிக்கொண்டு ஆற்றில் குளிக்க இறங்குகிறார்கள். அனைவரும் சிரித்து பேசி குளித்துக்கொண்டு இருக்கையில் பெரிய காற்றடித்து தனித்தனியாக கழற்றி வைத்திருந்த துணிகள் ஒரே இடத்தில் குவிந்துவிடுகின்றன.

 

காற்றில் துணி பறக்கிறது என்று அனைவரும் நீரை விட்டு எழுந்துவருகின்றனர். அதில் சர்மிஷ்ட்டை தேவயானியின் துணியை எடுத்து உடுத்திவிடுகிறாள். தேவயானிக்கு கடும் கோபம். எப்படி என்னுடைய உடையை எடுத்து நீ உடுத்தலாம் என்று சர்மிஷ்ட்டையை கடுமையாக திட்டுகிறாள். இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் உச்சத்தை அடைகிறது. ஒரு கட்டத்தில் கடுப்பான சர்மிஷ்ட்டை, நான் அசுரனின் மகள். என்னதான் இருந்தாலும் நான் கொடுக்கிற குடும்பத்தில் பிறந்தவள். நீ கையேந்துற குடும்பத்தில் பிறந்தவள்தானே என்று தேவயானியை பார்த்து தடித்த வார்த்தையை கூறிவிடுகிறாள். பின், சுக்ராச்சார்யார் மகள் தேவயானியை அங்கிருந்த கிணற்றில் தள்ளிவிடுகிறாள். இந்த சம்பவம் இல்லையென்றால் மகாபாரதமே இல்லை. ராஜகுமாரியான சர்மிஷ்ட்டை அங்கிருந்து கிளம்பிவிடுகிறாள். கிணற்றுக்குள் விழுந்த தேவயானி உதவிகேட்டு உள்ளிருந்து கத்துகிறாள்.

 

அந்த நேரத்தில் பக்கத்து தேச மன்னன் யயாதி வேட்டைக்கு வருகிறான். உதவி கேட்டு கிணற்றுக்குள் இருந்து குரல் கேட்டதையடுத்து, கிணற்றை எட்டி பார்க்கிறான். பின், அவளுக்கு கைகொடுத்து அவளை கிணற்றுக்குள் இருந்து மீட்கிறான். மேலே வந்த தேவயானி இன்றிலிருந்து நான் உங்கள் மனைவி என யயாதியிடம் கூறுகிறாள். யயாதிக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த விஷயம் சுக்ராச்சார்யாருக்கு தெரிந்து அவரும் அங்கு வந்துவிடுகிறார்.   

 

ad

 

இங்கிருந்து கிளம்பிச் சென்ற சர்மிஷ்ட்டை, தன்னுடைய அப்பாவிடம் சென்று சுக்ராச்சார்யார் மகள் தேவயானியை கிணற்றில் தள்ளிவிட்ட விஷயத்தை கூறுகிறாள். அவர் அடப்பாவி மகளே... இந்த விஷயம் சுக்ராச்சார்யாருக்கு தெரிந்தால் என்ன ஆவது? அவர்தான் அசுரர்கள் அனைவரும் உயிரோடு இருப்பதற்கே காரணம் என்கிறார். சுக்ராச்சார்யார் இல்லையென்றால் இந்திர லோகத்தில் உள்ளவர்கள் வந்து இவர்களை அழைத்துவிடுவார்கள். உடனே தன் ஆட்களை கூட்டிக்கொண்டு அந்த கிணறு இருக்கும் இடத்திற்கு கிளம்புகிறார். அங்கு யயாதி, சுக்ராச்சார்யார் நின்று கொண்டிருக்கின்றனர். அந்த அசுரன் ஓடிவந்து  சுக்ராச்சார்யார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்பா மன்னிக்கவெல்லாம் முடியாது... வாங்க நாம் வேற ஊருக்கு போய்விடுவோம் என தேவயானி கூற, சுக்ராச்சார்யாரும் சம்மதிக்கிறார்.

 

உடனே அசுரன் ஐயா நீங்க எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்க... தயவு செய்து நாட்டைவிட்டு மட்டும் போய்விடாதீர்கள் என்கிறார். அவர் உடனே மகள் தேவயானியைப் பார்க்க, நான் அவமானப்பட்டுவிட்டதால் இனி அங்கு வரமாட்டேன். அதனால் என் கணவன் யயாதியுடன் இணைந்து அவர் நாட்டிற்கே சென்றுவிடுகிறேன் என்கிறாள். சுக்ராச்சார்யார் யயாதியை அழைத்து என் மகளை உன் தேசத்திற்கே மனைவியாக அழைத்துச் சென்றுவிடு என்கிறார். அவனும் சம்மதித்துவிடுகிறான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அந்த அசுரன் பிரம்மை பிடித்தவன்போல நிற்கிறான். அப்படியென்றால் எங்களுக்கு விமோசனம் இல்லையா குருதேவா என சுக்ராச்சார்யாரிடம் கேட்க, அவர் மீண்டும் தேவயானியை பார்க்கிறார். என்னை அவமானப்படுத்தியவளை என்னுடன் பணிப்பெண்ணாக அனுப்புங்கள் என தேவயானி கூறிவிடுகிறாள். இனி நான்தான் கொடுக்கிற கை... அவள் வாங்குகிற கையாக இருக்க வேண்டும் என மிகப்பெரிய தண்டனையை சர்மிஷ்ட்டைக்கு கொடுக்கிறாள்.            

-தொடரும்...

சார்ந்த செய்திகள்

Next Story

“பொன்னியின் செல்வன் எடுத்துச் சம்பாதிக்கும் அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை” - கலைஞானம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

“தன்னுடைய கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆரால் ஏன் எடுக்க முடியவில்லை என்பது குறித்து கடந்த பகுதியில் பேசியிருந்தேன். அதன் பிறகு, கமல்ஹாசனுக்கு பொன்னியின் செல்வனை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவராலும் எடுக்க முடியவில்லை. பின், மணிரத்னம் எடுக்க இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தன. அவராலும் உடனே எடுக்க முடியவில்லை. அவருக்கும் நிறைய தடங்கல்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனால், அவர் நிச்சயம் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. ஏனென்றால் தன்னுடைய படங்களில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான ஆட்களை தேர்வு செய்வதில் அவர் கைதேர்ந்தவர்.

 

கதை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரியான ஆட்களை தேர்வு செய்யாவிட்டால் படம் தோல்வியடைந்துவிடும். கதை, கதாபாத்திரத்திற்கான நடிகர்கள், இயக்குநர் சரியாக அமையும்போதுதான் ஒரு படம் வெற்றியடைய முடியும். மணி ரத்னம் பொன்னியின் செல்வனை எடுக்கிறார் என்றதும் அனைத்து ஊடகங்களிலும் இன்றைக்கு பொன்னியின் செல்வன் பேசுபொருளாகிவிட்டது. ஜெயம் ரவி. விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என அத்தனை பேரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான ஆட்கள். அதனால் பொன்னியின் செல்வன் நிச்சயம் வெற்றிபெறும். 

 

இந்தக் கதையை எழுத கல்கியார் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ஏ.சி. ரூமுக்குள் உட்கார்ந்துகொண்டு இந்தக் கதையை அவர் எழுதவில்லை. சிலோன் உட்பட ஒவ்வொரு இடமாக நேரில் சென்று எங்கெங்கு என்னென்ன கல்வெட்டுகள் உள்ளன என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் பொன்னியின் செல்வனை அவர் எழுதினார். இந்தப் படத்தை எடுத்துத்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் மணிரத்னத்துக்கு இல்லை. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டிற்கு இந்தப் படத்தை எடுத்த நேரத்தில் வேறு படங்களை எடுத்து சம்பாதித்திருக்கலாம். ஆனால், பொன்னியின் செல்வனை எடுத்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினர் மன்னர் கால வரலாற்றை தெரிந்துகொள்ள இந்தப் படம் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன்”. 

 

 

Next Story

கனவுப்படமான பொன்னியின் செல்வனை எம்.ஜி.ஆர். எடுக்காதது ஏன்? - கலைஞானம் பகிர்ந்த தகவல்

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

kalaignanam

 

தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கும் முடிவில் இருந்து எம்.ஜி.ஆர். பின்வாங்கியது ஏன் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

”தமிழ் சினிமாவில் அன்றைய காலகட்டத்தில் தமிழ் நடிகைகளே கிடையாது. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்துதான் நடிகைகள் வருவார்கள். பெரும்பாலும் இந்தி நடிகைகளை பயன்படுத்தமாட்டார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகை இருந்தார் என்றால் அவர் டி.ஆர்.ராஜகுமாரி மட்டும்தான். பானுமதி, சாவித்ரி உட்பட மற்ற எல்லோருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். காமெடியில் மனோரமா மட்டும் தமிழ் நடிகை. பிற மொழி நடிகைகளால்தான் தமிழ் சினிமா புகழ்பெற்றது என்பதையும் மறுக்கமுடியாது. 

 

இன்றைக்கு வசனங்களை எளிதாக டப் செய்துவிடுகிறார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் டப் செய்வது அவ்வளவு எளிதல்ல. பொன்னியின் செல்வனில் குந்தவை பிராட்டியாரின் கதாபாத்திரம் உயிரோட்டமான கதாபாத்திரம். வந்தியத்தேவனுக்கும் குந்தவைக்கும் உள்ள உறவை மட்டும் வைத்து தனிப்படமே எடுக்கலாம். குந்தவை கதாபாத்திரத்தில் பத்மாவை நடிக்க வைக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். பத்மா நன்றாக தமிழ் உச்சரிப்பார். அவர் முகமும் வசீகரமாக இருக்கும். எம்.ஜி.ஆர். வந்தியத்தேவனாக நடிக்கும் எண்ணத்தில் இருந்தார். ஆனால், பத்மா பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்துவிட்டார். எம்.ஜி.ஆர். எவ்வளவோ கேட்டும் அவர் நடிக்கவில்லை எனக் கூறிவிட்டார். 

 

வரலாற்று கதை என்பதால் கம்பீரமான உடையணிந்து கீரிடம் வைத்துக்கொண்டு நடிப்பதற்கும் போதிய ஆள் தமிழில் கிடைக்கவில்லை. பிற மொழிகளில் நடிகர்கள் இருந்தாலும் படம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் தமிழ் நடிகர்களையே எம்.ஜி.ஆர். தேடினார். நாடக கம்பெனி நடிகர்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அவர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. முதிர்ச்சி இல்லாத நடிகர்களை பயன்படுத்தினால் படத்தில் அது குறையாக தெரியும். அந்தக் குறையை மறைக்க வேண்டுமென்றால் குந்தவை பாத்திரத்தில் பத்மா நடிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். பத்மா நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டதாலும் படத்தில் நடிக்க பொருத்தமான தமிழ் நடிகர்கள் கிடைக்காத காரணத்தாலும் பொன்னியின் செல்வன் எடுக்கும் முடிவையே எம்.ஜி.ஆர். கைவிட்டுவிட்டார்.

 

இன்றைக்கு வரலாற்று கதைக்கு பொருத்தமான உடலமைப்புடன் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி என நிறைய நடிகர்கள் உள்ளனர். அதனால் பொன்னியின் செல்வனை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மணிரத்னத்தால் எடுக்க முடிகிறது”.