சென்னை மாநகர மக்களுக்கு மட்டுமல்லாமல், புறநகரில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களின் அனைத்து வகையான சுப வைபவங்களுக்குரிய ஆடை அணிகலன் தேவைகளை, மனதிற்கு நிறைவாக பூர்த்தி செய்யும் விற்பனையகங்களில் சென்னை வேளச்சேரி, செம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் ‘இறைவி’ விற்பனையகமும் ஒன்று. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான விஜய் சேதுபதியின் உடன்பிறந்த சகோதரி ஜெயஸ்ரீ ராஜேஷின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் 'இறைவி' விற்பனையகம் ஐந்தாண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவன வளாகத்தில் பிரம்மாண்டமான விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் இறைவி நிறுவனர் ஜெயஸ்ரீ ராஜேஷ் பேசுகையில், ''இன்று இறைவி விற்பனையகம் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கிறது. இதன் பின்னணியில் ஏராளமானவர்களின் கடுமையான உழைப்பும், பேராதரவும் இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் இருநூறு சதுர அடியில் விற்பனையகத்தை தொடங்கினோம். இன்று 18,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக விரிவுபடுத்தி இருக்கிறோம். இதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்தது என்னுடைய சகோதரர் விஜய் சேதுபதிதான்.
ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னணியில் இருக்கும் ஆண் மகனைப் போல, என்னுடைய ஒவ்வொரு வெற்றியின் பின்னணியில் கணவர் ராஜேஷின் பரந்த மனப்பான்மையுடனான ஒத்துழைப்பு இருக்கிறது. என் தொழில் வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் சமச்சீராக எடுத்துச் செல்வதில், என்னுடைய அம்மாவின் பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
என்னுடைய வியாபார வழிகாட்டி, தொழில் ரீதியான மானசீக குருவாக கருதும் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் இங்கு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தியிருப்பதை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன். நான் எப்போதும் வியந்து பார்க்கும் தொழிலதிபரான நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களின் முன்னிலையில் நான் பேசுவேன் என கனவு கூட கண்டது கிடையாது. 2007 ஆம் ஆண்டில் புதிய விற்பனையகம் ஒன்றின் திறப்பு விழாவின் போது அவரை சந்தித்திருக்கிறேன். அவருடைய கம்பீரமான தோற்றம் என்னை ஆச்சரியப்படுத்தியது.
200 சதுர அடியிலிருந்து 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு வரை அவருடைய கடின உழைப்பில் நல்லி சில்க்ஸ் விரிவடைந்து இருக்கிறது. 40 கிளைகளையும் தொடங்கி இருக்கிறார்கள். ஏராளமான புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். மிக இயல்பான மனிதர். அவர் எங்கள் இறைவி விற்பனையகத்திற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி" எனத் தெரிவித்தார்.