'எஸ்.பி சினிமாஸ் தயாரிப்பு எண் 2' படத்தின் மொத்த படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. அருள்நிதி மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன் சிறிய சம்பிரதாய சடங்குகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. குறிப்பிடத்தக்க வகையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்சன் வேலைகள் பரபரப்பான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பரத் நீலகண்டன் படத்தை இயக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள்: அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யோகிபாபு, காயத்ரி, ரமேஷ் திலக், 'எருமை சாணி' விஜய், 'கும்கி' அஸ்வின், 'ஜாங்கிரி' மதுமிதா, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தை தயாரிப்பாளர்கள் எஸ்.பி சங்கர், சாந்தப்பிரியா தயாரிக்க, பரத் நீலகண்டன் இயக்கியுள்ளார்.
வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படம் கடந்த 22ஆம் தேதி வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று கேக் வெட்டி கொண்டாடினர்.
'தேஜாவு' வெற்றி குறித்து அருள்நிதி கூறுகையில், "இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். படத்தின் தயாரிப்பாளர் விஜய் பாண்டி இப்படத்தினை நன்றாக விளம்பரப்படுத்தி பொது மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்து, இதனை வெற்றிப் படமாக்கியுள்ளார். இத்தருணத்தில் அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 'தேஜாவு' திரைப்படம் ஒரு நல்ல அடையாளமாக இருக்கும். இப்படத்தை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி" எனக் கூறினார்.
படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பாளர் விஜய் பாண்டி கூறுகையில் "எனது நிறுவனத்தின் முதல் திரைப்படமே தரமான வெற்றிப் படமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி. இப்படத்தினை எனக்கு அளித்த அருள்நிதிக்கும், இதனை தரமான படமாக அளித்த இயக்குநர் அரவிந்த் மற்றும் படக்குழுவினருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் டீசர், ட்ரைலரை வெளியிட்டு படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைக்க காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி” எனத் தெரிவித்தார்.
அனுபவ் சின்ஹாவின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இந்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற பெயரில் அருண்ராஜா காமராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருந்தார். நேற்று (20.5.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு, சினிமா விமர்சகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் ஆரி கூறுகையில், "நெஞ்சுக்கு நீதி படத்தை பார்த்த பலரும் பாராட்டுகிறார்கள். சமூக நீதியை சரிசமமாக சொல்லும் படம் இது. ஒன்றை உயர்த்தி மற்றொன்றை தாழ்த்தி எடுக்கப்பட்ட படம் அல்ல. முக்கியமாக சாதி அரசியல் படம் அல்ல. நிறைய பேர் இந்த படத்தின் கதையை கேட்டு வேறு யாரையாவது நடிக்க வையுங்கள் என்று மறுத்திருக்கிறார்கள். குறிப்பாக அதர்வா, அருள்நிதி உள்ளிட்ட நடிகர்களுக்கு நன்றி. ஒரு வேலை அவர்கள் நடித்திருந்தால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.
மற்ற மாநிலங்களில் பெயருக்கு பின்னாடி சாதி இருக்கு. ஆனா இங்க பெயருக்கு பின்னாடி சாதி இல்லை. அப்படி இருக்கையில் நீங்க ஏன் இப்படி சாதியை தூண்டுகிற வகையில் படம் எடுக்கிறீர்கள் என்று பலர் கேட்கிறார்கள். நாம் பெயரில் மட்டுமே சாதியை ஒழித்து விட்டோம் , ஆனால் நம் மனதில் சாதி அப்படியே தான் இருக்கிறது. சாதியை வெளியில் சொல்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் சமூக நீதி பற்றிய புரிதலோடு இருப்பது ரொம்ப முக்கியம். நாம எந்த சாதியில் பிறந்தோம் என்பது பிரச்சனை இல்லை. ஆனால் அந்த சாதி பெருமையோடு மற்றவர்களை இழிவாக பாக்கிறதுதான் இங்க பிரச்சனை. அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்த படம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் தம்பி அருள் நீதி தவறவிட்ட இந்த படத்தை அவரின் அண்ணன் நடித்து 'நெஞ்சுக்கு நீதி'யில் இருக்கும் சமூக நிதியை மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.