Skip to main content

'இத்தனை நாள் காத்திருந்தது இதற்குத்தான்' - பிக்பாஸ் ஆரவ் அதிரடி ரீ-என்ட்ரி

Published on 15/09/2018 | Edited on 16/09/2018
arav

 

பிக்பாஸ் டைட்டில் அடித்ததன் மூலமாகவும், ஓவியாவுடனான காதல் மூலமாகவும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் ஆரவ். இவருடன் பிக்பாஸில் இருந்த சகாக்கள் பெரும்பாலானோர் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில் இவர் மட்டும் இன்னும் சினிமா பக்கம் இன்னும் தலையை காட்டவில்லையே என்று ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்நிலையில் ரசிகர்களின் இந்த நீண்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆரவ்வின் முதல் படமான 'ராஜபீமா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு பாலக்காட்டில் சமீபத்தில் முடிந்ததையடுத்து இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. மேலும் இப்படம் குறித்து நடிகர் ஆரவ் மனம் திறந்து பேசியபோது....

"ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச்சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு  மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது. 'ராஜபீமா' தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்பு தான். ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும். பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமெர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம். பொதுவாக, மனிதன் மற்றும் விலங்கு பற்றிய கதைகள் கிராமங்கள் அல்லது காடு, மலை பின்னணியில் இருக்கும். ஆனால் இந்த படம் பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு படத்துக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன்" என்றார். ஏற்கனவே 'சைத்தான்' போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் வெற்றிக்குப் பிறகு பொறுத்திருந்து நாயகனாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ஆரவ்.

 

சார்ந்த செய்திகள்