![actor mohan about vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/RId0wf4J2zaVIrg13l-Y5VZnL5NxT1ehWVAzFINmu6g/1708515190/sites/default/files/inline-images/113_36.jpg)
நடிகர், தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
மேலும், விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள இயலாத அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மரியாதை செய்து, விஜயகாந்த்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் மோகன் விஜயகாந்தின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேப்டன் விஜயகாந்த் அவர் பெயரில் இருக்கும் கேப்டனை போல, நடிகரைத் தாண்டி கேப்டனாகவும் வாழ்ந்தவர். அவருக்கு நண்பராக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். அவரின் முரட்டு தைரியமும் நேர்மையும் தான் எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம். அவர் இருந்தபோது செய்ததை இன்னமும் அவரது நினைவிடத்தில் அன்னதானம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது ரொம்ப பெருமைக்குரிய விஷயம். இன்றைக்கு அவரது ரசிகர் மன்றம் சார்பாக 1000 பேருக்கு அன்னதானம் கொடுத்து வருவதால் நானும் பெருமைப்படுகிறேன். அவரது திட்டங்கள் அனைத்தையும் அவர்கள் குடும்பத்தினர் நிறைவேற்றணும்” என்றார்.