Skip to main content

அம்மா வீட்டிற்கு அடிக்கடி பயணம்; இரவில் வீடியோ கால் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 32

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

 detective-malathis-investigation-32

 

மாதம் ஒரு முறை அம்மா வீட்டிற்கு போய் ஆகவேண்டும் என்று அடம்பிடித்த பெண்ணின் காரணத்தை கண்டறிந்த விதம் பற்றி முதல் பெண் துப்பறியும் நிபுணர் மாலதி நம்மிடையே விவரிக்கிறார்.

 

திருமணமான ஒரு ஆணும், அவரது அப்பாவும் நம்மிடம் ஒரு விசயத்தை கண்டறிந்து தருமாறு வந்தார்கள். தன்னுடய மனைவி மாதம் ஒரு நான்கு நாட்களுக்கு அம்மா வீட்டிற்கு போய்விடுகிறாள். என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். அம்மா வீட்டிற்கு சாதாரணமாக போகும் பெண்ணை ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேட்டால் இது தொடர்ச்சியாக கல்யாணம் ஆன காலத்திலிருந்து நடக்கிறது. அதனால் காரணம் தெரிய வேண்டும் என்றார்கள்.

 

நாமும் புலனாய்வு செய்ய ஆரம்பித்தோம், அம்மா வீட்டிற்கு செல்ல அந்த பெண்ணோ மாதவிடாயை காரணமாக சொல்லி இருக்கிறாள். ஆனால் அம்மா வீட்டிற்கு போகிறவள், வீட்டில் தங்குவதில்லை ஒரு ஆண் நண்பரை அடிக்கடி சந்திக்கிறாள். அவரோடு சண்டையிடுகிறாள். அவருக்காக நகையை அடகு வைத்து பணம் தருகிறாள். இவை அனைத்தையும் நமது புலனாய்வு வழியாக கண்டறிந்து ரிப்போர்ட்டை அவரது கணவரிடம் கொடுத்தோம்.

 

அந்த பெண்ணோ அந்த ஆண் நண்பர் தனது அண்ணன் என்றார். பிறகு ஏன் இரவில் வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசுகிறாய் என்றதற்கு அப்போதுதான் அவர் நைட் சிப்ட் வேலையில் இருப்பார் என்றாள். பிறகு இன்னும் தீவிரமாக விசாரித்ததில், வீடியோ காலில் பேசும்போதே அதை படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறான். அதனால் அவனிடமிருந்து விலக நகையை அடகு வைத்து பணம் தந்திருக்கிறாள் என்பதையெல்லாம் கண்டறிந்தோம். அவளும் ஒப்புக்கொண்டாள்.

 

பிறகு காவல்துறை உதவியோடு அந்த அண்ணன் என்ற ஆண் நண்பரை அழைத்து கண்டித்து அவர் வைத்திருந்த படங்களை அழித்து பெண்ணின் கணவரிடம் எடுத்துச் சொன்னோம். அவரும் அந்த பெண்ணை மன்னித்து ஏற்றுக்கொண்டார். துப்பறியும்போது நம்மால் சுமுகமாக முடித்து வைக்கிற அளவிற்குத்தான் வேலை செய்வோம். நம்மால் முடியாத பட்சத்தில் நாம் காவல்துறையின் உதவியை நாடுவோம் என்பதையும் தெரியப்படுத்தி விடுவோம்.


 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.