Skip to main content

இறுதிக் கட்டத்தில் மகளிர் ஆசியக்கோப்பை; இந்தியா இலங்கை பலப் பரீட்சை

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Women's Asia Cup in Finals; India Sri Lanka Multiple Exam

 

பெண்களுக்கான ஆசியக்கோப்பை  இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் இன்று பிற்பகல் மோத உள்ளன. 

 

மகளிர் ஆசியக் கோப்பையின் எட்டாவது தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு லீக் ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

 

ஏழு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியாவும் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசியக்கோப்பை வரலாற்றில் இந்தியா தொடர்ந்து எட்டாவது முறையாகவும் இலங்கை ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 7 முறை நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி வென்றுள்ளது.

 

இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஆசியக்கோப்பை போட்டியில் பந்துவீச்சில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 13 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.  அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 215 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிக வெற்றிகளைப் பெற்றதிலும் இந்திய அணியே முதலிடத்திலுள்ளது.

 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 


 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதித்த பார்வை மாற்றுத்திறனாளி இந்திய பெண்கள் அணி

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

India's visually impaired women's team beat Australia

 

சர்வதேச பார்வை மாற்றுத்திறனாளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், இங்கிலாந்து பர்மிங்காமி உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகிறது. இதில், இந்த ஆண்டு முதல்முறையாக கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. இதில், இந்திய பெண்கள் அணி பங்கேற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது.  

 

20 ஓவர் கொண்ட இந்த கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியா பெண்கள் அணி மோதின. இந்த இறுதி போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்களை இழந்து 114 ரன்கள் எடுத்தது. இரண்டாம் இன்னிங்ஸ் துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாக துவங்கப்பட்டது. பிறகு மழையின் காரணமாக மாற்றியமைக்கப்பட்ட 42 ரன்கள் இலக்கை இந்திய அணி எதிர்கொண்டது. 

 

இதில் இந்திய அணி, 3.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இந்திய பெண்கள் அணிக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். 

 

பிரதமர் நரேந்திர மோடி, தங்கம் வென்ற பார்வை மாற்றுத்திறனாளி பெண்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.பி.எஸ்.ஏ. உலக விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் பார்வை மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள். நமது விளையாட்டு, பெண்களின் அசைக்க முடியாத மனப்பான்மையையும் திறமையையும் எடுத்துக்காட்டும் ஒரு மகத்தான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது” என்று தெரிவித்துள்ளார்.