Skip to main content

மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் -எம்.ஜி.ஆர். !

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியதுமே புரட்சிநடிகர் என்பதை விலக்கிவிட்டு புரட்சித் தலைவர் ஆக்கினர். இவரும் அரசியல் வாழ்விலும் ஆட்சியிலும் தன்னைப் புரட்சித் தலைவராக நிரூபிக்க விரும்பவில்லை. அதைவிடத் தன்னை மக்களின் தலைவராக நிலைநாட்டவே விரும்பினார். அதில் வெற்றியும் பெற்றார்.

 

mgr



இரண்டிலும் தன்னுடைய பலமும் பக்க பலமும் என்ன என்பதை உணர்ந்திருந்ததுதான் வெற்றிக்குக் காரணம். சினிமாவில் அவர் புகழ்பெற்றிருந்த 20 ஆண்டுகளில் திரைப்படத்தின் போக்கு பலவிதங்களில் மாறினாலும், தனது ரசிகர்கள் எதை விரும்புவார்கள் என்பதைத் துல்லியமாக உணர்ந்து அதற்கேற்ற படங்களைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். அதுபோல, அரசியலில் தன்னை ஆதரிப்பவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கான தேவைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டவர். சினிமா, அரசியல் இரண்டிலும் தனது போட்டியாளர்களின் போக்குகளை உற்று நோக்கி தன் பயணத்தில் கவனம் செலுத்தியதும் எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் (எம்.ஜி.ஆர் அகம் - புறம்) என்று கணித்துள்ளனர்.

 

mgr



பெரியாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தம், உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ப் பல்கலைக்கழகம், பாரதி, பாரதிதாசன் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்து, இலங்கைத் தமிழர் நலம், காவேரி நடுவர் மன்ற கோரிக்கை, தெலுங்கு கங்கைத் திட்டம் என்று தமிழர் வளர்ச்சிக்கு ஆழமாகக் கால்கோள் செய்தார். சத்துணவுத் திட்டம், சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதித்தது, நியாய விலைக் கடையில் குறைந்த விலையில் அரிசி, பாமாயில், சர்க்கரை தந்தது, கிராம நிர்வாக அலுவலர் எனும் பரம்பரை பதவிகளை ஒழித்தது, இலவச வேட்டி சேலை, புயல் வெள்ளக் காலங்களில் உடனடி நிவாரணம் என இவர் மக்களுக்காக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் ஏராளம்.

 

mgr



மக்கள் இவரது ஆட்சியில் நடந்த அடக்குமுறைகளைப் பற்றியோ, மதுக்கடைகளைப் (டாஸ்மாக்) பற்றியோ, ஊழல்களைப் பற்றியோ, சுயநிதிக் கல்வித் தந்தைகளாகக் கட்சிக்காரர்களைப் படைத்தது பற்றியோ, பெரியாரின் சமூக நீதியைக் குலைத்தது பற்றியோ, நக்சலைட்டுகளை மனித உரிமைக்கு எதிராக நசுக்கியது பற்றியோ, கச்சத்தீவை சொன்னபடி மீட்காதது பற்றியோ, உள்ளாட்சி அமைப்பை உடைத்தது பற்றியோ, அடாவடி வரிவசூல் பற்றியோ, மேலவை கலைப்பு போன்ற எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இவை எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் நடந்ததாக நம்பினர். இவர் பேரைச் சொல்லி யார் யாரோ சம்பாதித்துக் கொண்டார்கள் என்றே எண்ணிக் கொண்டனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்டு மீண்டதும் அமெரிக்க சிகிச்சைக்குப்பின் மீண்டதும் இவரைத் தனிப்பிறவியாகவும் தெய்வப் பிறவியாகவும் கருத வைத்தது மக்களின் இதயக்கனி, இதய தெய்வம் ஆனார்.