Skip to main content

ஆட்டிஸம் குழந்தையைத் தவிக்கவிட்ட ஜோஹோ ஸ்ரீதர் வேம்பு; மனைவி பரபர குற்றச்சாட்டு! 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

- தெ.சு.கவுதமன் 

zoho ceo sridhar vembu husband and wife incident 

 

ஜோஹோ என்ற பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி ப்ரமிளா ஸ்ரீனிவாசன் சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

 

இந்தியாவில் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சி கண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், ஜோஹோ பிரபலமான ஒன்றாகும். இதன் சொத்து மதிப்பு 5 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, பல ஆண்டுகளாக கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது மனைவி ப்ரமிளா, தனது வழக்கறிஞர் ஜான் ஃபார்லி மூலமாகத் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், "ஸ்ரீதர் வேம்பு உடனான 29 ஆண்டு கால குடும்ப வாழ்க்கையில் என்னையும் எங்களுடைய மகனையும் தவிக்க விட்டுவிட்டு, கடந்த 2020 ஆம் ஆண்டில் கலிபோர்னியாவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார். எங்கள் மகனுக்கு ஆட்டிசம் நோயின் பாதிப்பு உள்ளது. இதோடு போராடி வரும் சூழலில், மூன்றாண்டு காலமாக என்னையோ எனது மகனையோ சந்திக்க வரவேயில்லை. எனவே கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு முறையிட்டேன். இச்சூழலில், எங்கள் இருவருக்கும் பொதுவான சொத்துக்களை எனக்கே தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் உள்ளிட்ட அவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

 

இதன்மூலம் எனக்கு ஜீவனாம்சம் மிகக் குறைவாகக் கிடைக்கும் படி செய்துள்ளார். எனக்கும் எனது மகனுக்கும் துரோகம் இழைத்துள்ளார். கலிபோர்னியா சட்டப்படி, கணவன் மனைவிக்கிடைப்பட்ட சொத்துக்களை இன்னொருவருக்கு கை மாற்றுவது தவறு" என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதர் வேம்பு மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் இப்போதுதான் பொதுவில் வெளிவந்துள்ளன. ஆனால் அவரோ, தமிழ்நாட்டின் கிராம பகுதிகளில் தொழில் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக நான் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளேன் என்று முன்பு தெரிவித்திருந்தார். இதற்காகவே கலிபோர்னியாவிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மத்தளம்பாறை என்ற கிராமத்துக்கு வந்து அங்கே தங்கியபடி தனது அடுத்தகட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கினார். இவர், தொழிலதிபராக மட்டுமின்றி தன்னை ஒரு இந்துத்வா சிந்தனையாளராகக் கடந்த சில காலமாக வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் சர்ச்சையான திருச்சி கல்யாணராமன் பேச்சு நடைபெற்ற பிராமணர் சங்க விழாவில் ஸ்ரீதர் வேம்புவும் கலந்துகொண்டிருந்தார். தனது ட்விட்டர் பதிவு ஒன்றில், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு அச்சுறுத்தல் இருந்ததால்தான் வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும் தற்போது வெளிநாட்டிலுள்ள பிராமணர்கள் தங்கள் அறிவை தாய் நாட்டுக்கு அளிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இப்படியான சூழலில் இவரது மனைவியின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

zoho ceo sridhar vembu husband and wife incident 

இதற்கு பதிலடியாக தனது ட்விட்டர் பக்கத்தில், தன் மனைவியின் மீது குற்றம் சாட்டியுள்ளார். தனது மனைவிக்கும் மகனுக்கும் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொடுத்திருப்பதாக கூறியுள்ளார். அங்கே சொந்தமாக வீடு, தனது மூன்றாண்டு கால அமெரிக்க சம்பளம் அனைத்தும் மனைவிக்கே அளித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். மகனுக்கு ஆட்டிஸம் பாதிப்பால் கடந்த 15 ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், அவனுக்கு இந்தியாவில் நல்லதொரு சூழலை ஏற்படுத்த விரும்பியதாகவும், அதற்கு மனைவி ஒத்துழைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது சித்தப்பா ராம் தான் தனது மனைவியின் மனதில் நஞ்சை விதைத்ததாகவும் இப்படி பேச வைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களைக் கூறிவரும் நிலையில், நீதிமன்றம் தான் யாரது கூற்று சரியெனத் தீர்மானிக்கும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைகள்; புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த பரிதாபம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Husband lost their life over wife passed away

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆடுதுறை ரவி(58). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு பூவரசன்(25) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில், மூத்த மகன் பூவரசனும் கந்தநேரி அடுத்த கழனிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வயா(20) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், நேற்று மாலை ஐஸ்வர்யா தோழியின் நிச்சயதார்த்த விழா பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதற்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு தன் கணவரிடத்தில் ஐஸ்வர்யா வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

பூவரசனும் அவரின் தாயாரை பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் வாரச் சந்தைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறியதாகவும் அதற்காக கணவன் மனைவி இடையே சிறிய அளவிலான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பூவரசன் தன் தாயை அழைத்துக் கொண்டு பள்ளிகொண்டாவில் உள்ள வாரச்சந்தைக்கு சென்றுள்ளார். பெண் தோழியின் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைத்துச் செல்லாததால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டினுள்ளே படுக்கையறையில் தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

சந்தைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய பூவரசன், ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக ஐஸ்வர்யாவை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கணவர், இன்று அதிகாலை மருத்துவமனை வளாகத்திலேயே விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவரிடம் காட்டிய போது அவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் ஏற்பட்ட சிறு தகராற்றால், கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கணவன் மனைவிக்கிடையே தகராறு; மன வேதனையில் மாமியார் எடுத்த விபரீத முடிவு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Woman lost their life in grief

ஈரோடு சி.என்.சி காலேஜ் அருகே கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா (49). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் ஜனனி. மேகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஜனனிக்கு திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தாய் மேகலா வீட்டிற்கு வந்துவிட்டார் ஜனனி. தனது மகள் கணவருடன் கோபித்துக் கொண்டு வந்ததால் மேகலா கடந்த சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில், கேரளாவிற்கு ஒரு விசேஷத்திற்காக ஜனனி சென்றுவிட்டார். வீட்டிலிருந்த மேகலா திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மேகலா தங்கி இருக்கும் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் மேகலா கிடந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், முன்பே மேகலா இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.