Skip to main content

“ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒரு பிணையக்கைதியை கொல்லுவோம்”  - இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை

Published on 10/10/2023 | Edited on 10/10/2023

 

palestine against Isareal

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் 25 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை மீண்டும் கைப்பற்றவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இருதரப்பும் மோதி வரும் சூழலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையேயான போரில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 2500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலில் 260 பேர் கலந்து கொண்ட ஒரு இசை நிகழ்ச்சியில், 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். மேலும், காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் 1.2 லட்சம் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

இந்தப் போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது, “ஹமாஸ் படையினர் மீதான தாக்குதல் தற்போது தான் தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் எதிரிகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதிலடி பல தலைமுறைகளுக்கு எதிரொலிக்கும்” என்று கூறியிருந்தார்.  

 

இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி காசா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பழிக்குப் பழியாக பிணைக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களில் ஒருவர் கொல்லப்படுவார் என்று ஹமாஸ் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இது குறித்து, ஹமாஸ் படையினரின் செய்தி தொடர்பாளர் அபு ஒபேதா கூறியதாவது, “காசா பகுதியில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துகிறது. இதனால், பல வீடுகள் அழிக்கப்பட்டு அப்பாவி மக்களும் உயிரிழந்துள்ளனர். எங்களது மக்களை இலக்காக வைத்து குடியிருப்புப் பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இஸ்ரேல் நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதிலடியாக எங்கள் பிடியில் உள்ள ஒரு இஸ்ரேலியர் கொல்லப்படுவார்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்