ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள கணக்குகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் நேற்று திடீரென முடங்கின.

அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளிக்க துவங்கிய நிலையில் அந்நிறுவனங்கள் அதன் தொழில்நுட்ப துறை வல்லுநர்களை வைத்து உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துவிட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், உலகளவில் இன்னமும் சில பயனாளர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள Down Detector, இங்கிலாந்து, டெக்சாஸ், சீட்டல், வாஷிங்டன், லத்தின் அமெரிக்காவின் சில பகுதிகள், பெரு, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் பயனர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் முடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட அந்த இடங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கை லாக் அவுட் செய்யவில்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்த முடிவதாகவும், அதேசமயம் அவர்களின் கணக்கு ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் முயன்றால் அவர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இந்த பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப குழு பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.