
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் காரில் வந்தவர்கள் படுகாயம் அடைந்ததோடு, விபத்துக்குள்ளான கார் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை, ஆவடி கௌரிபேட்டை ஈஸ்வரன் கோவில் அருகே உள்ள ஜெயின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தன்னுடைய மனைவியுடன் காரில் சொந்த ஊரான கோவில்பட்டியை நோக்கிப் பயணித்துள்ளார். காரை ஓட்டுநர் செந்தில்குமார் என்பவர் இயக்கிய நிலையில் கார் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியை ஒட்டிய ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஓட்டுநர் செந்தில்குமார் காரை சடன் பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். அப்போது பின்புறம் வந்த கார் இவர்கள் பயணித்த கார் மீது மோதியது. பின்னபுறம் மோதிய காசாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததோடு பற்றி எரியத் தொடங்கியது. அந்த காரில் பயணித்த திண்டுக்கல் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லய்யா, அவருடைய மனைவி சந்தியா, உறவினர்கள் மதுமித்ரன், இலக்கியா, சபரிநாதன், சரஸ்வதி என மொத்தம் ஆறு பேரும் காரில் இருந்து அவசரமாக வெளியேறினர்.
லேசான காயத்துடன் அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்து மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.