தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ஜனநாயகக் குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டை விட 10 இடங்கள் சரிவை சந்தித்துள்ளது.
![Democracy Index 2019 rank list](http://image.nakkheeran.in/cdn/farfuture/VHGVjlQfy7EbT4Wf49zgCTfy8c8cUrfgn_0dzlvfvfc/1579765823/sites/default/files/inline-images/ghfghfghfg.jpg)
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான 167 நாடுகள் அடங்கிய தரவரிசை மற்றும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா 2018-ல் இந்தக் குறியீட்டில் 7.23 புள்ளிகளுடன் 41 ஆவது இடத்தில இருந்தது. இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டில் 6.90 புள்ளிகளுடன் 10 இடங்கள் சரிந்து 51 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஜனநாயக குறியீட்டு பட்டியலில், மக்களின் உரிமை பறிப்பை மிகமுக்கிய காரணியாக எடுத்துக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல அரசியல் ரீதியிலான முடிவுகள் மற்றும் போராட்டங்கள், போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் போன்ற அதன் விளைவுகள் காரணமாக இந்தியா இந்த சரிவை சந்தித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வடகொரியா கடைசி இடத்திலும் உள்ளன.