Skip to main content

பள்ளி சிறுமியிடம் இளைஞர் ஆபாசப் பேச்சு; 3 கி.மீ. தூரம் பைக்கில் துரத்திய அப்பா - மகள்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Youth arrested Police for misbehaving with school girl ranipet

 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவன் மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்கிறானாம். இவன் பள்ளமுள்ளவாடி கிராமத்திலுள்ள தனது நண்பரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளான். பள்ளமுள்ளவாடி கிராமத்தை சேர்ந்த நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் ஏரிக்கரை மீது சைக்கிள் ஓட்டிக்கொண்டு பேனா வாங்க கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியை நிறுத்தி நண்பரின் பெயரை சொல்லி அட்ரஸ் விசாரித்துள்ளான். அந்த சிறுமி சைக்கிளை விட்டு இறங்கி அட்ரஸ் சொல்லும்போது, அந்த சிறுமியிடம் அழகா இருக்க எனத் தொடங்கி ஆபாசமாக பேசியதோடு, உடலின் மீது கை வைத்ததாக கூறப்படுகிறது. அவன் செயலைப் பார்த்து அதிர்ச்சியான அந்த சிறுமி, கத்தி கூச்சல் போட்டுள்ளார். உடனே அவன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளான்.

 

அந்த சிறுமி வீட்டுக்கு வந்து தனது தந்தையிடம் நடந்ததை சொல்லியுள்ளார். அதிர்ச்சியான அவர் உடனே காவல்நிலையத்தில் புகார் தரலாம் எனச்சொல்லி மகளை அழைத்துக்கொண்டு ராணிப்பேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். அப்பா – மகள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும்போது, தன்னிடம் பாலியல் ரீதியாக பேசியவன் எதிரில் இருசக்கர வாகனத்தில் வந்ததைப் பார்த்து சிறுமி தனது தந்தையிடம் சொல்லியுள்ளார். உடனே வண்டியை திருப்பிக்கொண்டு அவனை துரத்தியுள்ளார்கள். வண்டியில் தனது அப்பாவோடு அந்த சிறுமி தன்னை துரத்துவதைப் பார்த்தவன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளான். இவர்களும் விடாமல் துரத்தியுள்ளார்கள். இரண்டு கிலோமீட்டர் தூரம் துரத்தியும் அவனை பிடிக்க முடியாததால் தப்பிவிட்டான்.

 

அப்பாவும் மகளும் வந்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்தனர். அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணையும், அதன் வீடியோவையும் தந்துள்ளனர். இருசக்கர வாகன பதிவு பண்ணின் முகவரியை கண்டறிந்த போலிஸார், அவன் வீட்டுக்கு சென்று அந்த இளைஞனை கைது செய்து அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் கற்றுத் தருவது போல், ஆபாசமாக பேசினால் உடனே கூச்சல் போடவேண்டும், குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும் என சிறுமிக்கு பள்ளியில் ஆசிரியர்களும், வீட்டில் தாய்-தந்தை கற்றுத் தந்ததை மனதில் வைத்திருந்து அதுபோல் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவன் மீது புகார் தந்து சிறைக்கு அனுப்பிய அந்த சிறுமி மற்றும் குடும்பத்தாரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்