Skip to main content

வீட்டுக்குள் புகுந்த இளம்பெண்; மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

The young woman who entered the house; Cruelty to the old woman

 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது கொல்லங்குடி கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி. 70 வயதான இவர், தனது கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், லட்சுமிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேற்படி இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், மூதாட்டி லட்சுமி கொல்லங்குடியில் உள்ள தனக்குச் சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

 

மேலும், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி லட்சுமியை அவரது மகன்களும் மகளும் அடிக்கடி வந்து பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 3 ஆம் தேதியன்று மூதாட்டி லட்சுமி தனது உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் ஒரு மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அந்த நேரத்தில், மூதாட்டி லட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

இத்தகைய சூழலில், சிறிது நேரம் கழித்து 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் மூதாட்டி லட்சுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, நீங்கள் யார் என்று லட்சுமி அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வாங்கிக் கொடுக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், நீங்கள் கைம்பெண்ணாக இருந்தால் கூடுதலாக 500 ரூபாய் பெற்றுத் தருவதாகக் கூறி தொடர்ந்து பேச்சு கொடுத்துள்ளார்.

 

ஒருகட்டத்தில், இதை நம்பிய மூதாட்டி லட்சுமி அந்த பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்துள்ளார். இதற்கிடையில் மூதாட்டி லட்சுமி, மதகுபட்டி ராமலிங்கபுரத்தில் உள்ள அவரது மகள் மல்லிகாவை செல்போனில் அழைத்து, “இங்க வெரிஃபிகேஷனுக்கு வந்திருக்காங்க மா... ஆயிரம் ரூபாய் தருவாங்களாம்... நீயும் இ-சேவை மையத்துல பதிவு பண்ணு. உனக்கும் பணம் கொடுப்பாங்க. பேத்திய அனுப்பி என்னன்னு பாக்க சொல்லு...” என வெளியூரில் இருக்கும் தனது மகளிடம் இதுகுறித்து பேசியுள்ளார். மேலும், வீட்டுக்குள் புகுந்த அந்த பெண்ணிடமும் லட்சுமியின் மகள் பேசியுள்ளார். 

 

இதையடுத்து, மூதாட்டி லட்சுமியிடம் அடையாள அட்டைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த இளம்பெண், அந்த பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்துள்ளார். அந்த நேரத்தில், அப்பகுதி முழுவதும் ஆள் நடமாட்டம் இல்லாததைத் தெரிந்துகொண்டு அந்த பெண் ஒரு அதிர்ச்சி திட்டத்திற்கு தயாராகியுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி சிறு பிள்ளை போல் அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண் மூதாட்டி லட்சுமி அணிந்திருந்த 30 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

 

ஒருகணம், இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி அந்த பெண்ணைத் தடுத்து நிறுத்திவிட்டு கூச்சலிடத் தொடங்கியுள்ளார். அந்த சமயத்தில், நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து உடனடியாகத் தப்பிக்க வேண்டும் என முடிவு செய்த அந்த பெண், மூதாட்டியைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும், இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய சூழலில், சிறிது நேரம் கழித்து உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி லட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கத்திக் கூச்சலிடவே அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று கூடினர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை டிஎஸ்பி சிபிசாய் சவுந்தர்யன் தலைமையிலான போலீசார், மூதாட்டி லட்சுமியின் வீட்டை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனர்.

 

அதன்பிறகு, அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காளையார்கோவில் போலீசார் மூதாட்டி லட்சுமியை கொலை செய்தது யார் எனத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்கு அருகே வந்து சென்றதும் அவரது கையில் ஒரு கட்டைப்பை வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து, விறுவிறுவென கிளம்பிய அந்த பெண் தொண்டி பேருந்தில் ஏறி அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

 

அதே வேளையில், நகைகளைக் கொள்ளையடிக்கும்போது இவர்களுக்குள் நடந்த மோதலில் மூதாட்டி லெட்சுமி இறந்துவிட்டதாக போலீசார் கூறுகின்றனர். இத்தகைய சூழலில், சிசிடிவி காட்சிகள் காவல்துறைக்கு கிடைத்தாலும், அந்தப் பெண்ணை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது, போலீசார் திரட்டிய ஆதாரங்களை வைத்துக்கொண்டு தலைமறைவாகியிருக்கும் அந்த பெண்ணை வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் காளையார்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியாமல் திணறி வரும் காவல்துறையினருக்கு இந்த மூதாட்டி கொலை வழக்கு மேலும் சவாலாக அமைந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார். 

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.