Skip to main content

துபாய்க்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகள்... துரிதமாக நடவடிக்கை எடுத்த புலனாய்வு அதிகாரிகள்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

wood to be smuggled to Dubai ... Intelligence officers who acted quickly

 

கரோனா தொற்று காரணமாக இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அங்கே அதன் விலைகள் உஷ்ணம் போல் ஏறியுள்ளன. இதன் காரணமாகவே அங்கே அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உணவுப் பதுக்கல் காரர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இந்தத் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தூத்துக்குடியிலிருந்து விரலி மஞ்சள், கருப்பு மிளகு, உணவுப் பொருள்கள் மற்றும் போதைப் பொருள்கள் உள்ளிட்டவை இலங்கைக்குக் கடத்தப்பட்டு வந்தாலும் தற்போது அவைகளில் சில மட்டுமே சிக்குகின்றன.

 

இதனிடையே சந்தடி சாக்கில் விலை மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் கடத்தவிருந்ததும் தடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது தான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் கன்டெய்னரில் வைக்கப்பட்டு சுங்கத்துறை அனுமதி பெற்றும் அவைகள் சுங்கத்துறை அதிகாரிகளால் பார்வையிட்டு அவைகளில் அவர்கள் சீல் வைத்த பிறகே இந்தக் கன்டெய்னர்கள் ஏற்றுமதிக்காகத் துறைமுகத்திற்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுவது வழக்கம். முன்னதாகவே இந்தக் கன்டெய்னர்கள் அனைத்தும் சுங்கத்துறை அங்கீகாரம் பெற்ற கன்டெய்னர் முனையங்களில்தான் வைக்கப்பட்டிருக்கும். இந்தச் சூழலில் சிப்காட் பகுதியிலிருந்து செயல்படும் ஒரு கன்டெய்னர் முனையத்திலிருந்து கடத்தல் பொருள்கள் அனுப்பப்படுகின்றன என்று தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு யூனிட் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

 

அதையடுத்து சிப்காட்டுக்குச் சென்ற அதிகாரிகள் முனையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அதுசமயம் அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கன்டெய்னரை சோதனையிட்ட போது அதில் ஒன்றில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து செம்மரக்கட்டைகளையும் அதனை ஏற்றி வந்த லாரியையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களின் விசாரணையில் செம்மரக்கட்டைகளைப் பதுக்கியது தொடர்பாக ஜார்ஜ் என்பவரைக் கைது செய்தனர். விசாரணைக்குப் பின்பு அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளோ, கடத்தப்படவிருந்த செம்மரக் கட்டைகள் 5.69 மெட்ரிக் டன் எடையுள்ள விலைமதிப்பான கட்டைகள்.

 

இதன் மதிப்பு சுமார் 2.30 கோடிக்கும் மேலாகும். இந்தச் செம்மரக் கட்டைகள் ஆந்திராவிலிருந்து, தூத்துக்குடிக்குக் கடத்திவரப்பட்டு பின் இங்கிருந்து வேறு பொருட்கள் என்ற அடையாளத்துடன் துபாய் துறைமுகமான ஜபல் அலிக்குக் கடத்தப்படவிருந்தது தெரியவந்தது. இந்தக் கடத்தலில் சுங்கத் துறையினருக்கும் தொடர்பிருக்கிறதா என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது என்கிறார்கள். விலைமதிப்புள்ள செம்மரக் கட்டைகளுக்கு வெளிநாடுகளில் ஏகக் கிராக்கியாம். மருத்துவம், விலை மதிப்புள்ள இருக்கைகள் மற்றும் பல்வேறு இசைக் கருவிகளும் தயார் செய்வதற்கு இவை ஏற்றதாகும் என்கிறார்கள் உபரித் தகவல்களாக. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ்க்கு இலங்கையில் தீவிர விசாரணை!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
 Police arrested 3 people including Murugan who arrived in Sri Lanka

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 7 தமிழர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்ட முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தனர். இதனைத்தொடர்ந்து மூவரையும் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியை தொடர்ந்து நேற்று திருச்சி முகாமில் இருந்து மூவரும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், மூவரும் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து  முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் மூவரும்  கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியுள்ளனர்.  அப்போது மூன்று பேரையும் இலங்கை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவிற்கு சென்றது குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.