Skip to main content

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை அவமானப்படுத்திய கும்பல்; உயிரை விட்ட இளம்பெண்

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

woman passed away due usury chennai

 

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் அகிம். இவரது மனைவி நூர்ஜகான் பாத்திமா. இந்த தம்பதிக்கு யாஸ்மின் என்கிற 26 வயது மகளும், ஜவகர் பரூக் என்கிற 24 வயது மகனும் இருக்கின்றனர். இந்நிலையில், சையத் அகிம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். அப்போது, கணவனை இழந்த நூர்ஜகான், தன் இரண்டு பிள்ளைகளுடன் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளார்.

 

மேலும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்த நூர்ஜகான், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது பிள்ளைகளை காப்பாற்றி வந்துள்ளார். அதே சமயம், பிள்ளைகளின் படிப்பு செலவுக்காகவும் குடும்ப தேவைக்காகவும் அக்கம் பக்கத்தினரிடம் கடன் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலரிடம், தனிப்பட்ட முறையில் நூர்ஜகான் பாத்திமா சிறுகச் சிறுக 8 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் வட்டியும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது.

 

ஒருகட்டத்தில் பணம் கொடுத்த கடன்காரர்கள், வட்டியுடன் சேர்த்து 18 லட்ச ரூபாயாக தர வேண்டும் என நூர்ஜகானை மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த நூர்ஜகான், வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் கடன்காரர்களுக்கு பயந்து தலைமறைவானார். இதனால் பதறிப்போன நூர்ஜகானின் மகன் ஜவகர், அவரைப் பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனால், நூர்ஜகானை எங்கு தேடியும் கிடைக்காததால் 17ஆம் தேதியன்று கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

 

அப்போது தலைமறைவான நூர்ஜகான், தான் தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் வீட்டில் இருப்பதாக செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில், ஜவகர் வேலை சம்பந்தமாக  வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் அவரது சகோதரி யாஸ்மின் மட்டும் தனியாக இருந்துள்ளார். அந்த சமயம், வீட்டிற்கு வந்த கடன் கொடுத்த மூன்று பெண்கள், யாஸ்மினை தகாத வார்த்தையில் அவமானப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, வாங்கிய பணத்தை வட்டியோடு கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.

 

இதனால், மனவேதனை அடைந்த யாஸ்மின் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். அப்போது வீட்டில் ஆறுதல் சொல்வதற்கு கூட யாரும் இல்லாததால் தனிமையில் வாடிய யாஸ்மின், வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு, வீட்டிற்கு வந்த ஜவகர், தன் சகோதரியின் உடலை பார்த்து கண்ணீர்விட்டு கதறியுள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த போலீசார், யாஸ்மினின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும், இச்சம்பவம்  தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஜவகர் பரூக் கந்துவட்டி கொடுமையால் தனது சகோதரி யாஸ்மின் தற்கொலை செய்து கொண்டதாகவும், இதற்கு காரணமான மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே சமயம், கந்துவட்டி கொடுமையால் அவமானப்படுத்தப்பட்ட பெண், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.