தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் நகரைச் சேர்ந்தவர் கண்ணன். லாரி டிரைவர். இவரின் மனைவி சுமதி. தம்பதியர் இருவரும் வெவ்வேறு சமூகம் சார்ந்தவர்கள். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள். குடும்ப வறுமை காரணமாக மூத்த மகள் தன் கல்லூரிப் படிப்பை 2ம் ஆண்டோடு முடித்துக் கொண்டார். இரண்டாவது மகள் 8ம் வகுப்பு படித்து வருபவர்.
இந்தச் சூழலில் கண்ணனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகத் தெரிகிறது. இதனால் கணவன் மனைவிக்குள்ளே தொடர் தகராறுகள் நடந்துள்ளனவாம். மேலும் கணவன் கண்ணன் தன் வருமானத்தை வீட்டில் கொடுக்காமலிருந்தது வேறு மனைவியின் ஆத்திரத்தைக் கிளறியுள்ளதாம். சுமதி பீடி சுற்றுவதன் மூலம் கிடைக்கிற சொற்ப வருமானத்தில் மகள்களை வளர்த்திருக்கிறார்.
இதனிடையே, நேற்று மாலையில் மகள்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு நடந்திருக்கிறது. இந்த வயசுல அடுத்தவளோட சகவாசமா எனத் தகராறு முற்றவே ஆத்திரமான கண்ணன், மனைவி சுமதியைத் தாக்கியுள்ளார். இதில் வலி பொறுக்கமாட்டாத சுமதி, அலறியபடி தெருவில் ஓடியிருக்கிறார். அவரை விடாமல் கண்ணன் துரத்தியடித்ததால் தப்பிப்பதற்காக சுமதி ஆலங்குளம் காவல் நிலையம் அருகிலுள்ள முத்தாரம்மன் கோவிலுக்குள் ஓடியிருக்கிறார்.
ஆனாலும் விடாமல் விரட்டிய கணவன், கோயிலில் கிடந்த கம்பியைக் கொண்டு சுமதியின் தலையில் சரமாரியாக அடித்ததில் ரத்தம் கொப்பளிக்க கதறக் கதற சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதனைத் தொடர்ந்து கண்ணன் அங்கிருந்து தப்பியிருக்கிறார். தகவல் போய் சம்பவ இடம் வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி.சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் உள்ளிட்ட போலீசார் சுமதியின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர்கள், தப்பியோடிய கண்ணனை அத்தியூத்து என்ற இடத்தில் கைது செய்தனர். தாய் சுமதியின் உடலைப் பார்த்து அவரது இரு மகள்களும் கதறியழுதது பொதுமக்களின் மனதைக் கனக்க வைத்தது.