Skip to main content

அரசு வேலை வாங்கித்தருவதாக 1.40 கோடி சுருட்டினோம் - எடப்பாடி உதவியாளரின் கூட்டாளி பரபரப்பு வாக்குமூலம்

Published on 27/12/2021 | Edited on 27/12/2021

 

We rolled over 1.40 crore that the government would buy the job !; Edappadi aide's allied sensational confession!

 

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராக இருந்த மணியின் கூட்டாளி, அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடம் 1.40 கோடி ரூபாய்வரை வசூலித்து மோசடி செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே உள்ள குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 28). பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் மாவட்டக் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்து இருந்தார். 

 

அந்தப் புகார் மனுவில், ''தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்த சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நடுப்பட்டியைச் சேர்ந்த மணி (வயது 51) என்பவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, என்னிடம் 13 லட்சம் ரூபாய் வாங்கினார்.

 

ஆனால் அவர் உறுதியளித்தபடி எனக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோது அவர் தர முடியாது எனக் கூறிவிட்டார்.

 

இந்த மோசடிக்கு, ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியைச் சேர்ந்த மணியின் நண்பர் செல்வகுமார் (வயது 49) என்பவரும் உடந்தையாக இருந்தார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' எனப் புகார் மனுவில் தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார். 

 

அதன்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணி, செல்வக்குமார் ஆகிய இருவரையும் தேடிவந்தனர். இதற்கிடையே மணி, முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் தலைமறைவான அவரை, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

மணியின் கூட்டாளி செல்வகுமார் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், டிச. 24ம் தேதியன்று இரவு, கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் செல்வகுமார் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 

 

இதையடுத்து, மறுநாள் அதிகாலையில் காவல்துறையினர் செல்வகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ''போக்குவரத்து, வருவாய், கல்வித்துறை எனப் பல துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் நானும், எடப்பாடி பழனிசாமியின் உதவியாளருமான நடுப்பட்டி மணியும் 1.40 கோடி ரூபாய் வாங்கினோம். 

 

அதில், இதுவரை 82 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்துவிட்டோம். தமிழ்ச்செல்வனிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கினோம். ஆனால் அவருக்கு எங்களால் வேலை வாங்கிக் கொடுக்க முடியவில்லை'' என்று கூறியதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது.

 

இதையடுத்து, செல்வகுமாரை சேலம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதித்துறை நடுவர் உத்தரவின்பேரில் காவல்துறையினர் அவரை, சங்ககிரி கிளைச்சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதமாக காவல்துறைக்கு போக்கு காட்டி வந்த செல்வகுமார் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.