விதிமுறை மீறல்: ரத்னா ஸ்டோர் உள்ளிட்ட 222 கடைகளுக்கு சீல்
திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட ரத்னா ஸ்டோர் உள்ளிட்ட 222 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி என்எஸ்பி ரோட்டில் ரத்னா ஸ்டோர்ஸ் உள்ளது. இந்த கட்டிடமானது விதிமுறைகளை மீறி 5 மாடி அளவில் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம் விதிமுறையை மீறி கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை மூடி சீல் வைக்க திருச்சி உள்ளுர் திட்டக்குழுமத்திற்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை உள்ளுர் திட்டக்குழு உறுப்பினர் செயலர் கைலாசம் தலைமையில் அங்கு சென்ற அரசு அலுவலர்கள் கடையை மூடி சீல் வைக்க சென்றனர். மிகப்பெரிய கட்டிடம் சீல் வைக்க விருப்பதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
கடை சீல் வைக்க வந்திருப்பது குறித்து கடையின் நிர்வாகிகளுக்கு உள்ளுர் திட்டக்குழு அலுவலர்கள் அறிவித்தனர். பின்னர் கடையின் பிரதான வாயில் ஷெட்டர்களை மூடி, பூட்டு போட்டு சீல் வைத்தனர். அதன் பின்னர் அனுமதிக்கு மாறாக மற்றும் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இக்கட்டிடம் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 56(2)(யு) ன் கீழ் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
திருச்சி பிரதான வர்த்தக சாலையான என்எஸ்பி ரோட்டில் உள்ள மிக பெரிய கடையான ரத்னா ஸ்டோர்ஸ் நீதிமன்ற உத்தரவின்படி மூடி சீல் வைக்கப்பட்டது. அதேபோன்று பாலாஜி டவர்ஸில் அமைந்துள்ள கடைகள், என்.எஸ்.பி சாலையில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட கடைகள் என மொத்தம் 222 கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ஜெ.டி.ஆர்.