Skip to main content

பெண் மீது தாக்குதல்; தட்டிக் கேட்டவர் கொலை! 

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

villupuram north street man incident police investigation started 

 

விழுப்புரம் நகராட்சியில் உள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (வயது  45). இவர் விழுப்புரம் காந்தி வீதியில் உள்ள ஒரு அங்காடியில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்து வந்த இவர் நேற்று மாலை ரம்ஜான் நோன்பு இருப்பதற்காக பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு வாலிபர்கள் ஒரு பெண்ணை துரத்தி தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனைக் கண்டு இப்ராஹிம் மனம் பொறுக்காமல் ஏன் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார். இவரைப் போலவே அங்கு நின்றிருந்த தீபக் என்ற வாலிபரும் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்தவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். அந்த வாலிபர்கள், தங்களைத் தட்டிக் கேட்ட இப்ராஹிம் வயிற்றிலும் தீபக் முகத்திலும் கத்தியால் குத்தியுள்ளனர். இதைக் கண்டு அப்பகுதியில் இருந்த கடைக்காரர்கள் பொதுமக்கள் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

கத்தியால் குத்தி விட்டுத் தப்பி ஓட முயன்ற இந்த இரண்டு வாலிபர்களை அப்பகுதி கடை ஊழியர்கள் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். உடனடியாக அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விழுப்புரம் டவுன் டிஎஸ்பி பார்த்திபன் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த இப்ராஹிம் மற்றும் தீபக் ஆகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இப்ராஹிம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

கத்தியால் குத்திய இரண்டு வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் விழுப்புரம் பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், ராஜசேகரின் தந்தை ஞானசேகரன் என்பவருக்கும் இவர்கள் இருவரும் துரத்தி தாக்குதல் நடத்திய அந்த பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாகவும் இதை அறிந்த அவரது மகன்கள் ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட அந்த பெண்ணை கடைவீதியில் மறித்து தகராறு  செய்து அடித்து உதைக்க துரத்திச் சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் மிரண்டு ஓடியபோது தான் இப்ராஹிம் மற்றும்  தீபக் ஆகிய இருவரும் ஏன் தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளனர்.

 

இதற்கிடையில், தகராறு நடப்பதைப் பார்த்து பயந்த அந்தப் பெண் பல்பொருள் அங்காடியில் ஓடி ஒளிந்துள்ளார். அங்காடிக்குள் புகுந்த ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவரும் அந்த பெண்ணை தாக்கினர். அதை இப்ராஹிமும் தீபக்கும் தடுத்தபோது தான் அவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிடிபட்ட ராஜசேகர், வல்லரசு ஆகிய இருவர் மீதும் விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜசேகர் வல்லரசு இருவரும் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்து விழுப்புரம் நகர வியாபாரிகள் இன்று கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். கடைவீதியில் நடைபெற்ற இச்சம்பவம் விழுப்புரம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.