Skip to main content

மெய் மறந்த பெண் பக்தர்கள்; கைவரிசை காட்டிய பெண் கும்பல் 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

villupuram district mailam temple festival incident  

 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கொல்லியம் குணம் கிராமத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் என பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி குடமுழுக்கு  விழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் மத்தியில் ஊடுருவி திருட வந்த பெண்கள் பலர் பெண்களிடம் இருந்து நகைகளை  பறித்துள்ளனர்.

 

இதில் மயிலும் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி லட்சுமி காந்தம் என்பவரிடமிருந்து ஆறு பவுன் நகையும், இறையானூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலி என்பவரிடமிருந்து மூன்று பவுன் நகையும், கணபதி பட்டு கிராமத்தைச் சேர்ந்த மலர்விழி என்பவரிடமிருந்து மூன்று பவுன் நகை என சுமார் 15 பவுன் தங்க நகைகளை பெண்கள் திருடிச் சென்றுள்ளனர். தாங்கள் அணிந்திருந்த நகைகளை பறிகொடுத்த பெண்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டு உள்ளனர். இதையடுத்து மயிலம் போலீசார் அந்த கும்பலில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்களை தீவிரமாக தேடினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு நின்றிருந்த ஐந்து பெண்கள் ஒரு ஆட்டோவில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் சந்தேகம் அடையும் வகையில் பதில் அளித்துள்ளனர்.

 

அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று முறையான விசாரணை நடத்தியதில் குடமுழுக்கு விழாவில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்களிடம் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களான, தஞ்சாவூர் மாவட்டம் கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி செல்வி, சங்கர் என்பவர் மனைவி ஜெயந்தி, ஆசைத்தம்பி என்பவர் மனைவி கஸ்தூரி, திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா, திருவரம்பூர் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மனைவி ராசாமணி என்பதும் இவர்கள் இங்கு மட்டுமல்லாமல்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குடமுழுக்கு விழா மற்றும் திருவிழாக்களில் மெய் மறந்து பக்தியோடு சாமி தரிசனம் செய்யும் பெண் பக்தர்களை நோட்டமிட்டு அவர்கள் தன்னிலை மறந்து  இருக்கும் நேரத்தில் அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க நகைகளை பறித்து  கொண்டு அங்கிருந்து தப்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும்  கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏழரை பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.