அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்துவருகிறார்கள். சுமார் 20க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோவை குனியமுத்துரில் உள்ள அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். மேலும், அவரது சகோதரர் வீடு, சென்னை, காஞ்சிபுரம், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட 53 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக அதிமுகவினர் எம்எல்ஏ விடுதிக்கு முன்பு குவிந்துவருகிறார்கள்.
விசாரணை நடைபெறும் இடத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் வருகைதந்த நிலையில், அவர்களை உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துவருகிறார்கள். கோவையில் ரெய்டு நடைபெறும் வேலுமணியின் வீட்டின் முன் அமைத்த பேரிகார்டுகளைத் தூக்கி எறிந்தனர். இதனால் காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.