Skip to main content

'சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் வரை அனுமதி'- முதல்வர் பழனிசாமி உத்தரவு!

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

TV SERIALS TAMILNADU CM PALANISAMY NEW ORDER


60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 
 


இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு 21-05-2020 அன்று நான் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தேன். 

அனுமதி அளிக்கப்பட்ட 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கை குறித்து செய்தித்துறை அமைச்சர் என்னுடன் கலந்தாலோசித்தார்கள். மேற்படி சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நாளை (31/05/2020) முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுபடப்பிடிப்பிற்கும் ஒருமுறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும். 
 

 


சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்துக் கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு, படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்