திருச்சி மாநகரில் நேற்று 126 இடங்கள், திருச்சி சுற்றியுள்ள ஊரகப் பகுதிகளில் 635 இடங்கள் என மொத்தமாக 761 இடங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகத் திருச்சி தில்லைநகர் விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்புத் தடுப்பூசி முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு நேரில் சென்று பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “திருச்சி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்களாக 22.80 லட்சம் பேர் உள்ளனர். இதுவரை 11 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும். மாநகரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியான 7.50 லட்சம் பேரில் 4.5 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 3.40 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இம்முகாமில் டாக்டர்கள் 20 பேர், நர்சுகள் 400 பணியாற்றினார்கள். தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம் 5வது இடத்தில் உள்ளது” என்றார்.