
கடலூரில் சாமி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடலூர் மாவட்டம் சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் திடல் உற்சவ திருவிழா கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நேற்று இரவு சிறிய தேரில் சாமி சிலையை வைத்து நான்கு சக்கர தட்டு வண்டியில் வைத்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இன்று அதிகாலை ஒரு தெரு பகுதிக்கு தேர் சென்ற பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பிகள் தேர் மீது உரசியது.
இதில் தேரை பிடித்து இழுத்துச் சென்ற சிறுவன் உள்ளிட்ட ஆறு பேர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக ஆறு பேரும் மீட்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இதில் கருணச்சந்திரன் என்ற நபர் உயிரிழந்தது தெரியவந்தது. சிறுவன் உள்பட மற்ற ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.