Skip to main content

சிறையில் இருக்கும் கணவரை விடுதலை செய்யக்கோரி மனைவி எடுத்த விபரீத முடிவு!

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

tragic decision taken by the wife to free her husband who is in jail

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் புரட்சித்தமிழன்(27). இவரை இரும்புலிகுறிச்சி போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பரணம் கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் தாலிச்செயினை அறுத்த வழக்கில் போலீசார் புரட்சித்தமிழனைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இவர் மீது அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் இது போன்ற திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் இதன் காரணமாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின் பெயரில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதி அவர்கள் புரட்சித்தமிழனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த நிலையில், ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புரட்சித்தமிழனை வழக்கு சம்பந்தமாக செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அவரை பார்ப்பதற்காக அவரது மனைவி அங்கு வந்திருந்தார். கணவரைப் பார்த்ததும் கதறி அழுத அந்தப் பெண் திடீரென கையில் வைத்திருந்த விஷமருந்தைக் குடித்துள்ளார். இதைக் கண்டு போலீசார் மற்றும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் அவரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

அந்தப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, “எனக்கு 17 வயது தான் ஆகிறது. கடலூர் மாவட்டத்தில் எனது கிராமம் உள்ளது. புரட்சித்தமிழனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். என் கணவருக்குத் திருட்டுப் பழக்கம் இருப்பது எனக்குத் தெரியாது. இந்த நிலையில், என் பெற்றோர், உற்றார் உறவினர்கள் யாருடைய ஆதரவும் இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு எனது கணவர் மட்டும் தான். எனவே, அவரை விடுதலை செய்ய வேண்டும். இனிமேல் அவர் திருட்டு தொழிலுக்குப் போகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

 

இதைக் கேட்ட போலீசார் நாங்கள் உங்கள் கணவரை விடுதலை செய்ய முடியாது. நீங்கள் நீதிமன்றத்தைத் தான் நாடவேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கிடையே புரட்சித்தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் கொண்டு சென்று அடைத்துள்ளனர். திருட்டு குற்றத்தில் ஈடுபட்ட கணவரை விடுதலை செய்யக்கோரி பெண் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் விஷம் குடித்த சம்பவம் பரிதாபத்துக்குரியதுதான். இருந்தும், சட்டத்தின்படி தான் எல்லாம் நடக்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள். இந்தச் சம்பவம் செந்துறை பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.