Skip to main content

‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ - தமிழக அரசு முக்கிய தகவல்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
TN Govt Important Information for kalaignar Women Rights Project  

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார். மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் புதிதாகக் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை மாதந்தோறும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. 

TN Govt Important Information for kalaignar Women Rights Project  

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு 2024 - 2025 ஆம் நிதியாண்டில் ரூ.13,722 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 1.15 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்காக மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம். செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தபின் 30 நாட்களுக்குள் இ - சேவை மையம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்கிறார்’ - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Minister tRb raja says cM MKStalin is going to America 

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலுரை வழங்கினார். அப்போது பேசுகையில், “ஆண்டுக்கு 10 லட்சம் என்ற அடிப்படையில், 31 லட்சம் வேலைவாய்ப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். விரைவில் 50வது சிப்காட் பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைப்பார். தஞ்சையில் பாமாயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் 60% உறுதி செய்யப்பட்டுள்ளன. அதாவது 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 379 ஒப்பந்தங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.  கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த 2 முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக கூறினாலும், அவற்றில் சொற்பமானவை மட்டுமே பணிகளாக மாறின. 

Minister tRb raja says cM MKStalin is going to America 

மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்தாண்டு  ரூ. 2100 கோடி கடன் வழங்கப்படும். திருவண்ணாமலை மற்றும் கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். மேலும் தனியார் பங்களிப்புடன் கூட்டு முயற்சியில் தொழிற்பூங்காக்களை சிப்காட் உருவாக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது. மேலும் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
CM MK Stalin resolution brought by is unanimous

தமிழக சட்டப் பேரவையில், நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.06.2024) உரையாற்றினார். அந்த தீர்மானத்தில், “கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக்கல்வி வாய்ப்புகளைக் கடுமையாகப் பாதிக்கும் வகையிலும், பள்ளிக் கல்வியை அவசியமற்றதாக்கும் வகையிலும், மாநில மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்கும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் வகையிலும் அமைந்துள்ள நீட் தேர்வு முறை அகற்றப்பட வேண்டும்.

இந்தத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்து, பள்ளிக் கல்வியில் மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்காக, இந்தச் சட்டப் பேரவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு சட்டமுன்வடிவிற்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளித்திட வேண்டுமென்றும், தொடர்ந்து பல முறைகேடுகளுக்கு வழிவகுத்து வரும் இந்தத் தேர்வு முறையை பல்வேறு மாநிலங்களும் தற்போது எதிர்த்து வரும் நிலையில், தேசிய அளவில் நீட் தேர்வு முறை கைவிடப்படும் வகையில் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு சட்டப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், “இந்தத் தீர்மானத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்ப்பினர்கள் கலந்துக்கொண்டு பேசினர். அதனைத் தொடந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு மத்திய அரசு உடனடி ஒப்புதல் தர வேண்டும் என்ற தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.