தூத்துக்குடி நகரம் உள்பட மாவட்டம் முழுமையிலும், கரோனா தொற்று பரவல் வேகமெடுக்கிறது. அன்றாடம் 200, 180, 150, என்ற அளவிலேயே தொற்றின் அளவுகோல் போய்க் கொண்டிருக்கிறது. அது மாவட்டத்தில் சமூக தொற்றாகி இன்றைய அளவில் பாதிப்பின் அளவு 3,914க்கு சென்றும் பாதிப்பு மேற்குறிப்பிட்ட அளவுகளுக்கு குறைந்தபாடில்லை.
எனவே இதனைக் கருத்தில் கொண்டுதான் கடந்த மாதமே தூத்துக்குடியின் பெரிய காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவதால், தொற்று பரவலாகிவிடும். அதனைத் தடுக்கும் வகையில் அந்த பிரதானக் காய்கறி கடைகளை மூடிவிட்டு, நகரின் வெளிப்புறமுள்ள புதிய பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியுடன் கூடிய 50க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை மாவட்ட கலெக்டரான சந்தீப் நந்தூரியும், மாநகராட்சி கமிசனரான ஜெயசீலனும் இணைந்து அமைத்தனர்.
தற்போது இந்த தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகளிடம் கரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டதில், 27 வியாபாரிகளுக்கு தொற்று கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. இயைடுத்து மீதமுள்ள வியாபாரிகளுக்கும் கரோனா சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலைய காய்கறி சந்தை மூடப்பட்டு, கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.