புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பசுமலைபட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திலிருந்து பயிற்சியின்போது கடந்த 30ஆம் தேதி எங்கிருந்தோ வந்த தோட்டா புகழேந்தி என்ற சிறுவன் தலையில் பாய்ந்தது. இதில் காயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். வீடு கட்டி கொடுக்க வேண்டும். அரசு வேலை வழங்க வேண்டும். உரிய விசாரணை செய்து துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவனின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவனது உடல் இன்று பிரேத பரிசோதனைக்குப் பிறகு சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் குளத்தூர் தாலுகாவில் உள்ள 12 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.