தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 105 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டத்தில் மற்றும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி அவ்வாறு மாற்றப்பட்டனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேலானதை அடுத்து, ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிக்களில் சிலர் முன்பு பணியாற்றிய அதே மாவட்டத்திற்கும், பலர் புதிய பணியிடங்களுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இன்னும் சிலர் சொந்த மாவட்டத்திற்கு பக்கத்து மாவட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஓமலூர் சப்டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் டி.சரவணன் சேலம் மாநகர வடக்கு சரக உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி சப்டிவிஷன் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.பாஸ்கரன் மீண்டும் ஓமலூர் டிஎஸ்பியாக மாற்றப்பட்டு உள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.அசோக்குமார், மாவட்ட மது ஒழிப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இந்த இடம் ஏற்கனவே காலியாக இருந்தது.

சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக டிஎஸ்பியாக பணியாற்றி வரும் எஸ்.சண்முகையா, சென்னை பெருநகர காவல்துறை நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு பணியாற்றி வரும் உதவி கமிஷனர் கலைசெல்வன், சென்னை பெருநகர ஆணையரக மக்கள் தொடர்பு அலுவலக உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேலம் மாவட்ட ரூரல் சப்டிவிஷன் சங்கரநாராயணன், சென்னை பெருநகர செயின்ட் மவுன்ட் சரக உதவி கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அங்கு பணியாற்றி வரும் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், சென்னை பெருநகர மதுவிலக்குப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். சேலம் மாநகர மேற்கு சரக உதவி கமிஷனர் எஸ்.சேகர், ஈரோடு மாவட்டம் பவானி சப்டிவிஷனுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி சப்டிவிஷன் டிஎஸ்பி பி.எம்.தங்கவேல், சேலம் மாவட்டம் சங்ககிரி சப்டிவிஷனுக்கு மாற்றப்பட்டு உள்ளார். தர்மபுரி மாவட்ட கியூ பிரிவு டிஎஸ்பி ஹயாத், கோவை மாவட்ட டான்ஜெட்கோ விஜிலன்ஸ் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவர்கள் உள்பட மாநிலம் முழுவதும் மொத்தம் 105 டிஎஸ்பி / உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.