Skip to main content

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என்ன? எஸ்.டி.பி.ஐ. கேள்வி

Published on 24/01/2019 | Edited on 24/01/2019
sterlite



தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 

சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் பலவீனமான அரசாணையை தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், உச்சநீதிமன்றமும் நிராகரித்துள்ள நிலையில், ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் வேகமாக முன்னெடுத்து வருகின்றது.
 

இந்த சூழலிலும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோரிக்கையான ஆலையை நிரந்தரமாக மூடும் கொள்கை தீர்மானத்தை நிறைவேற்றாமல், ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது என்று  சொல்லிவருகின்றது. அதேவேளையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினாலே கைது என்கிற சூழலையும் காவல்துறை ஏற்படுத்தி வருகின்றது. சமூக செயல்பாட்டாளர் சந்தோஷ்  உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

போலீஸாரின் இந்த அடக்குமுறையை கண்டித்து பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஹரிராகவன், மைக்கேல் தனிஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதையும், துண்டுபிரசுரம் வழங்குவதையும், நாளிதழ்களில் விளம்பரங்களை வெளியிடுவதையும் அனுமதிக்கும் தமிழக அரசு, சுற்றுப்புறச் சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் பெரும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய் திறந்தாலே கைது நடவடிக்கையை மேற்கொள்வது என்பது கண்டிக்கத்தக்கது.
 

சுற்றுச்சூழல் பாதிப்பை காரணம் காட்டி தமிழக அரசால் அரசாணை மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது, அதில் அரசு உறுதியாக உள்ளது என தமிழக அரசு கூறிவரும் நிலையில், ஆலைக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளதாகவும், லட்சக்கணக்கானோர் ஆலையை திறக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்துள்ளார். இது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
 

ஆகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அதோடு தூத்துக்குடியில் காவல்துறை மூலம் மேற்கொண்டுவரும் கைது நடவடிக்கையை நிறுத்துவதோடு கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.