Skip to main content

ஸ்டாலின் பக்கம் தாவிய அழகிரி ஆதரவாளர்கள்!

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

தி.மு.க.விலிருந்து ஓரம் கட்டப்பட்ட மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தேனி மாவட்டத்தில் ஓரளவுக்கு இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய அழகிரி ஆதரவாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் அழகிரி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் அதோடு விளையாட்டுப் போட்டி வைத்தும், கேக் வெட்டியும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி வருவது வழக்கம். அந்த அளவுக்கு அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலுமே கடந்த ஐந்த வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறார்கள். 

 

st

 

இந்த நிலையில் தான் கடந்த 27ம் தேதி தேனி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனையும்,  பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களான சரவணக்குமார், மகாராஜனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய தேனி வந்தார் ஸ்டாலின். இப்படி வந்த ஸ்டாலின் தேனியில் உள்ள பிரபல லாட்ஜில் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு எடுத்துக்கொண்டு கட்சிப் பொறுப்பாளர்களையும், கூட்டணி கட்சி பொறுப்பாளர்களையும் சந்தித்து தேர்தல் களம் குறித்து ஆய்வு செய்து வந்தார். 

 

அப்போது தேனி மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான தலைமை கழக முன்னாள் செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் முன்னாள் நகர செயலாளருமான செல்லப்பாண்டியன், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளரான கம்பம் இளங்கோவன், நெசவாளர் அணியின் முன்னாள் செயலாளர் ஆண்டிப்பட்டி ஏ.கே.குமார், உத்தமபாளையம் முன்னாள் ஒன்றிய செயலாளர் முல்லை சேகர் உள்பட சில அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள் தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாலை, சால்வை அணிவித்து கழகத்தில் ஐக்கியமாகிவிட்டனர். 

 

t

 

இதுபற்றி ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்த முன்னாள் பொறுப்பாளர்களிடம் கேட்டபோது... நாங்கள் அண்ணன் அழகிரி ஆதரவாளராக இருந்ததுனால எங்களிடம் இருந்த பொறுப்புகளையும் எடுத்துவிட்டு கட்சியில் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் எடுத்திருந்தனர். இதனால் எங்களால் கழக பணியாற்றாமல் இருக்க முடியவில்லை. அதோடு தலைவராக தளபதி வந்ததிலிருந்தே அனைத்து பகுதிகளிலும் கட்சி வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளுக்கும் சரியான பதில் அடி கொடுத்து கழகத்தை வழிநடத்தி வருவதைக் கண்டு நாங்களே பூரித்துப் போய் விட்டனர்.  

 

அதனால் தான் இனிமேல் எதற்கு பெயர் சொல்லும் அளவில் மட்டும் இருப்பவர்களுடன் இருந்தால் எங்களுக்கும், இனி மரியாதை இருக்காது என்று நினைத்துதான் தளபதி முன்னால் திமுகவில் சேர்ந்து விட்டோம். எங்களுடன் ஒவ்வொரு பகுதியிலும் இருந்த கிளை பொறுப்பாளர்கள் கட்சித் தொண்டர்களும் மீண்டும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன்மூலம் மாவட்டத்தில் பெரும்பான்மையான அழகிரி ஆதரவாளர்கள் தளபதி பக்கம் வந்துவிட்டோம். இன்னும் ஒரு சில முன்னாள் பொறுப்பாளர்கள் மட்டுமே அழகிரி பக்கம் இருக்கிறார்கள். அவர்களும் கூடிய விரைவில் தலைவர் பக்கம் வருவார்கள் என்று கூறினார்கள். ஆக தேனி மாவட்டத்தில் உள்ள அழகிரியின் கூடாரமும் காலியாகிவிட்டது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.