Skip to main content

எஸ்எஸ்எல்சி தேர்வர்களுக்குத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்; மே 26 முதல் விநியோகம்!

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

 SSLC public examination will be issued a provisional score certificate from May 26

 

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே 26 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தேர்வுத்துறை  இயக்ககம் அறிவித்துள்ளது.     

 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடந்தது. இதன் முடிவுகள் மே 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஐடிஐ., பாலிடெக்னிக் கல்லூரி, பிளஸ்1 சேர்க்கைக்குத் தயாராகி வருகின்றனர். இதற்காக மாணவர்கள் நலன் கருதி, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை  (மே 26) முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.     

 

இது தொடர்பாகத் தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் கூறியது: “எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, அந்தந்த உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகள் மூலம், தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவிகளின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைத் தேர்வுத்துறை இயக்கக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், தனித்தேர்வர்கள் எந்தெந்த மையங்களில் தேர்வு எழுதினார்களோ அந்த மையங்களின் தலைமை ஆசிரியர்கள் தனித்தேர்வர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் உள்ள தேர்வரின் பெயர், பிறந்த தேதி, தேர்வரின் தலைப்பெழுத்து (இனிஷியல்), புகைப்படம், பயிற்று மொழி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டும்.     

 

இதையடுத்து, மே 26 ஆம் தேதி பிற்பகல் முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை விநியோகம் செய்யத் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்களுக்கு அவர்கள் தேர்வு எழுதிய மையங்கள்  வாயிலாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின், பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தால் அறிவிக்கப்படும் குறிப்பிட்ட நாளில் திருத்தங்கள் செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்படும். தேர்வர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்போது, மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் குறிப்பிடப்படும் இடத்தில், 'உண்மைச்  சான்றிதழைப் பார்க்க' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு தேர்வர்களுக்கு வழங்க வேண்டும்.”  இவ்வாறு தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்கக அதிகாரிகள் கூறினர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.