
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் (74) அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கினர்.
எஸ்.பி.பி.யின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இசைக்காகவும், பின்னணி பாடல்கள் பாடுவதிலும் தனது வாழ்நாளை செலவிட்டவர் எஸ்.பி.பி., எஸ்.பி.பி.யின் மறைவு உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்களுக்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.