வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்ட தாயைப் பெற்ற மகனே நடுவீதியில் விட்டுச்சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவில் கடந்த ஒரு வாரமாக கேட்பாரற்று மூதாட்டி ஒருவர் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர்,சரியான உடை கூட இல்லாமல் கிடந்திருக்கிறார். அவரின் இந்த பரிதாப நிலை குறித்து அப்பகுதி மக்கள் கோவில்பட்டியில் உள்ள செய்தியாளர்களுக்கு தகவல் அளித்தனர்.
![son who left his mother on the street due to his age](http://image.nakkheeran.in/cdn/farfuture/aUV-d0CmpAZaWe4dp_pI_d5E3ipvz4auqp6FKSd-QIc/1571191301/sites/default/files/inline-images/z98_0.jpg)
சரியாக உடை கூட இல்லாமல் மழையிலும், வெயிலிலும் கிடந்த அந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த சண்முகத்தாய் என்று தெரியவந்தது. அவருக்கு போர்த்திக்கொள்ள உடைகளை வாங்கிக் கொடுத்த செய்தியாளர்கள் இந்த நிலை குறித்து அந்த மூதாட்டியிடம் விசாரித்த பொழுது அவருடைய மகனே வீதியில் விட்டு சென்றதை கூறியுள்ளார். இதுகுறித்து கோட்டாட்சியருக்கு செய்தியாளர்கள் தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் வருவாய் துறையினர் ஆகியோர் சண்முகத்தாயின் மகனிடம் விசாரித்தனர்.
![son who left his mother on the street due to his age](http://image.nakkheeran.in/cdn/farfuture/I2PsL7bbuW2W5BYZzNK8VMq-bSRXdIdDjeTv1cvajMc/1571191316/sites/default/files/inline-images/z99.jpg)
வறுமையின் காரணமாக பெற்ற தாயை பராமரிக்க முடியவில்லை என்று அவர் கூறியதை அடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூதாட்டி சண்முகத்தாய் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் பாண்டவர் மங்கலத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.