Skip to main content

சிவகாசியில் நிருபர் மீது தாக்குதல்! - திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 05/03/2020 | Edited on 06/03/2020

சிவகாசியில்  ‘குமுதம் ரிப்போர்ட்டர்’  இதழின் நிருபர் கார்த்தி கடந்த 3-ஆம் தேதி தாக்கப்பட்டார். இதனைக் கண்டித்து, சிவகாசியில்  திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர்  சார்பில்  இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

sivakasi journalist issue

 



அதிமுக உட்கட்சி பூசல் குறித்தும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன்  குறித்தும்  செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து நிருபர் கார்த்தி தாக்கப்பட்டார். ஸ்டெல்லா பாண்டியும்  பூ முருகனும்தான்  தாக்கினார்கள்  என்று இருவரையும் காவல்துறை கைது செய்தது.  

இந்நிலையில், தாக்குதலைக்  கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்  சார்பில், சிவகாசி பேருந்து நிலையம் முன்பாக, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எம்எல்ஏ,  மற்றும்   வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  விருதுநகர் (திமுக) எம்எல்ஏ சீனிவாசன், ராஜபாளையம் (திமுக) எம்எல்ஏ தங்கபாண்டியன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 

 

sivakasi journalist issue

 



ஆர்ப்பாட்டத்தின்போது, நிருபர் கார்த்தி மீது  தாக்குதல் நடத்தியவர்களை  உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும்,  தாக்குதலைக்  கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து,  தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் விருதுநகர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் ஆகியோரிடம்  மனு அளித்தனர். 


 

சார்ந்த செய்திகள்