
சமீபமாகவே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதங்கள் மூலமாக வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு வடக்கு கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களை விசைப் படகுகளுடன் சிறைபிடித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
காங்கேசன் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அவர்கள் விசாரணைக்கு பிறகு யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இன்றும் இலங்கை கடற்படையினரால் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.