Skip to main content

மாநிலக் குழுவுக்கு அதிகாரம்; எஸ்.டி.பி.ஐ கட்சி மாநிலச் செயற்குழுவில் தீர்மானம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
SDPI State Executive Committee to empower state committee to form alliance in parliamentary elections

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று(12.2.2024) நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அப்துல் ஹமீது,  பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸுருதீன், மாநிலச் செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.  இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொதுச்செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் குழுவின் மூலம் நடைபெற்ற பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது. மேலும், கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநிலத் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கி மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கடந்த பத்தாண்டு பாஜக ஆட்சியின் அவலத்தை, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையிலும், அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் மாநில சுயாட்சிக்கு எதிரான போக்கையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சிறுபான்மை மக்கள், அரசு ஊழியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது, தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சார்ந்த செய்திகள்